Why do I love and respect Karunanithi | கருணாநிதி 96 வது பிறந்தநாள் பகிர்வு

ஜுன் 03 திரு கருணாநிதி அவர்களின் பிறந்ததினம். ஒருபக்கம் முதுபெரும் அரசியல் கட்சித்தலைவரின் பிறந்தநாளை கட்சி உடன்பிறப்புக்கள் கொண்டாடினாலும் மறுபக்கம் ஊழல்வாதியின் பிறந்தநாள் என பதிவிட்டு வருகின்றனர் . இதன்காரணமாக கருணாநிதி அவர்கள் குறித்து எப்படி எண்ணுவது என்கிற குழப்பம் இன்றைய இளைஞர்களிடத்தில் இருக்கின்றது . அதுகுறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்ககாவே இந்த பதிவு .

தற்போது இளைஞர்கள் நினைப்பது போல கருணாநிதி அவர்களின் மீது குற்றம் சொல்ல பல விசயங்கள் இருக்கின்றன . அவரை சார்ந்தவர்கள் மீதான குற்றசாட்டுக்கள் , ஊழல் , வாரிசுகளுக்கு முக்கியதுவம் கொடுத்தல் , ஈழம் என பல விசயங்கள் இருக்கின்றன . ஆனால் அவை மட்டுமே கருணாநிதி அல்ல என்பது இந்தக்கால இளைஞர்களுக்கு தெரியவில்லை .

இது தவறுதானே ? அதற்காகத்தான் இந்த பதிவு .

13 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் , அதிகபட்சமாக பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டிருப்போம் அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருப்போம் . ஆனால் கருணாநிதி என்னும் சிறுவனோ தனது 13 ஆம் வயதிலேயே சமூக நடவெடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தனது வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை ஏற்படுத்தினார் .

பின்னர் இதே அமைப்புதான் அனைத்து மாணவர் கழகம் என மாநில அளவில் விரிவடைந்தது . இந்த அமைப்பின் மூலமாக மொழி ஆற்றலையும் இன உணர்வினையும் பல இளைஞர்கள் பெற்றனர் .

1938 இந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

1940 களிலேயே “தமிழ்நாடு” “தமிழ்நாடு மாணவர் அமைப்பு” போன்றவைகளை ஏற்படுத்தி மாணவர் ஒற்றுமையை வலுப்படுத்த கடுமையாக பாடுபட்டார் .

1941 இல் இந்த அமைப்புகள் தஞ்சை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிறுவ கடுமையாக பாடுபட்டார் .

இணையம் , சமூக வலைதளம் என எதுவுமே இல்லாத காலகட்டத்தில் மாணவர்களிடம் சந்தா வசூலித்தே ஒரு அமைப்பினை நடத்துவது என்பது எவ்வளவு பெரிய காரியம் .

மாணவர்களின் எழுத்தாற்றலை செழுமையாக்க 1941 இல் ( 13 ஆம் வயதில் ) மாணவ நேசன் என்னும் பத்திரிக்கையை கையெழுத்து ஏடாக தொடங்கினார் .

இதன்பிறகு முரசொலி என்னும் பத்திரிகையை துவங்கி அது இன்றுவரை தொடர்கின்றது .

அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடங்கி தனது திறமையினால் சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் முதல்வராக உயர்ந்தார் .

இங்கு உதாரணத்திற்கு கருணாநிதி அவர்களின் இளமை பருவத்தை இங்கு குறிப்பிட்டு இருக்கின்றேன் .

நம் அனைவருக்கும் அரசியல்வாதிகள் குறித்து தெரியாமல் போனாலும் அரசியலில் நிலைத்திருக்கவும் வெற்றிபெறவும் என்னவெல்லாம் செய்யவேண்டி இருக்கும் என்பதை அறிந்திருப்போம் . ஆகையால் தான் அரசியல்வாதிகளின் வாழ்க்கைப்பயணம் என்பது அவ்வளவு
தூய்மையானதாக மக்கள் விரும்பும்படியாக இருப்பதில்லை .

எங்கே நேர்மையாக சொல்லுங்கள் , நமக்காக உழைக்கும் ஒருவரை பணம் ஏதும் வாங்காமல் அவரை வெற்றிபெற வைக்கிறோமா ? இல்லையே . ஆனால் ஒருவரும் சரியில்லை , அனைவரும் ஊழல்வாதி என மட்டும் பேச தயங்குவதே இல்லை .

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் கருணாநிதி அவர்களோ திராவிட கட்சிகளோ ஒன்றுமே செய்திடவில்லை என சொல்லுபவர்கள் தமிழக வரலாற்றினை சரியாக அறிந்துகொள்ளாதவர்கள் என கூறிவிடலாம் . இன்றும் தமிழகம் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சியும் ஒரு காரணம் .

பாமரன் கருத்து

கருணாநிதி என்னும் ஆளுமையிடம் விமர்சனம் செய்வதற்கு சில விசயங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன . அவற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் நாம் வரலாற்றுப்பிழை செய்கின்றோம் .

என்னை மிகவும் கவர்ந்த கருணாநிதி 13 வயது இளம் கருணாநிதி தான் . நாம் இருபத்தைந்து முப்பது வயதுகளித்து யோசிப்பதை 13 வயதிலேயே செய்துகாட்டியவர் கருணாநிதி .

அவர்குறித்து அவரது அந்தக்கால செயல்பாடுகள் குறித்து படித்தீர்களேயானால் உங்களது வாழ்விற்கு உந்து சக்தியாக அது நிச்சயம் இருக்கும் .

பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகளை பகிர்வோர் எளிமையாக ஆளுமைகளை எள்ளிநகையாடி விடுகிறார்கள் . நண்பர்களே ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய நல்லது கெட்டதுகளை சொல்லிடுங்கள் , மக்களை அதிலிருந்து புரிந்துகொள்ள அனுமதியுங்கள் .

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *