Asifa | ஆசிபா வன்கொலை : மானுடம் மீண்டும் ஒருமுறை தோற்றுப்போனது

யாதொன்றும் தெரியாத
பிஞ்சு குழந்தையவளை
ஆறறிவு மிருகங்கள்
வன்கொலை செய்து
காட்டில் வீசிடும்
கொடுமைகள் நடந்திடுதே

விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்
இரண்டிலும் விண்தொட்டும்
கற்பழிப்பு கொலைகளை
தடுக்க முடியாமல் மானுடம்
மறுபடியும் தோற்றதே

அண்மையில் நடந்துவரும் கற்பழிப்போடு கூடிய பெண் குழந்தைகளின் மரணம் நம்மை கொதிப்படைய செய்கிறது . ஒவ்வொருமுறை இதுபோன்ற கொடூரமான செய்திகளை காணும்போதும் பெண் குழந்தைகளை இனி எப்படித்தான் பாதுகாப்பது என்கிற அச்சம் வருகின்றது .

விளைவு அண்டை வீட்டுக்காரர் அன்போடு பேசினால் கூட அவரையும் சந்தேகபட வைக்கிறது இந்த கொடூர செய்திகள் . பார்த்து பார்த்து பாதுகாப்போடு பெண் குழந்தைகளை வளர்த்து வரும்போது போலீசாரின் விசாரனை அறிக்கைகள் நம்மை நிலை குலைய செய்கின்றன .

ஆசிபா என்கிற சிறுமி பல கொடூரர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாகி சிதைந்த நிலையில் பிணமாக மீட்டெடுக்கப்படுகிறார் . இதற்கு காரணம் என்ன என விசாரிக்கும்போது ,

இந்து மதத்தை சேர்ந்த ஒருவன் முஸ்லீம் பெண் ஒருவரை தொந்தரவு செய்ய அந்த மக்கள் அவனை அடித்துவிடுகிறார்கள் . இதற்கு பழிவாங்க , அவனுடய மாமாவோடு கூட்டு சேருகிறான் . இனி முஸ்லீம் மக்கள் இந்துக்களை கண்டால் அச்சப்பட வேண்டும் அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார்கள் .

ஆடுமேய்க்கபோகுமிடத்தில் ஆசிபாவை கடத்துகின்றனர் . கோயிலில் வைத்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள் . இவர்களை காப்பாற்ற போலீஸ் அதிகாரியை அழைக்கிறார்கள் . பிறகு மீண்டும் கூட்டு வன்புணர்வு , அத்தனையும் மயக்க மருந்து கொடுத்தே நடக்கிறது .

பொதுமக்கள் குழந்தையை தேட ஆரம்பித்துவிட்டபடியால் வன்புணர்வு செய்த அடையாளங்களை அழிக்க , அந்த பிஞ்சு உடலை சிதைத்து காட்டுக்குள் வீசுகிறார்கள் . பிறகு தலைமுடியின் DNA வைத்து குழந்தையை அடையாளம் காண்கிறார்கள் .

இத்தனையும் நடந்து இந்துக்களை கண்டால் முஸ்லீம்கள் பயப்படவேண்டும் என்கிற முட்டாள்தனமான காரணத்திற்க்காக.

மற்றுமொரு கொடுமை உத்திரபிரதேச சட்டமன்றமன்ற உறுப்பினர் ஒருவரால் அரங்கேறி தற்போது தான் கைதாகி இருக்கிறார்.

ஒவ்வொருமுறை பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கொல்லப்படும்போதும் கிளர்ந்து எழுகிற மானுட சமூகம் இந்தமுறையும் குரல் எழுப்ப தவறவில்லை. ஆனால் இந்த குரல் இன்னொரு ஆசிபாவை கயவர்களின் தாக்குதலில் இருந்து காக்குமா என தெரியவில்லை.

ஒவ்வொரு பெற்றோரும் ஆண் பிள்ளைகளை பெத்தோம் வளர்த்தோம் சமூகத்தில் விட்டோம் என்றில்லாமல் சில பண்புகளையும் கட்டுப்பாடுகளையும் சொல்லிக்கொடுக்க வேண்டிய தருணம் இது. இதனை அலட்சியம் செய்துவிட்டு ஒவ்வொரு முறையும் கதறிக்கொண்டிருப்பது எந்த மாற்றத்தையும் சமூகத்தில் பெற்று தராது.

அரசு இந்த கொடூர மிருகங்கள் உலகில் வாழ தகுதி அற்றவர்கள் என கருதி உடனடியாக மரண தண்டனை அளித்திட வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு உதவுபவர்கள்,குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனையை கொடுத்திட வேண்டும். அந்த தண்டனை எந்த சமரசமும் மேல்முறையிடும் இல்லாததாக இருக்கவேண்டும்.

ஆணினம் பழிவாங்க, பயமுறுத்த, அற்ப இச்சைக்காக பெண்களை தேர்ந்தெடுப்பதை இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக அடுத்தவர்களின் குழந்தைகளை தங்களது குழந்தைகள் என எண்ணிட வேண்டும். உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போனால் விலைமாதர்கள் இருக்கிறார்கள் எங்கோ போய் தொலையுங்கள்.

இனியாவது இதுபோன்ற கொடூர மரணங்கள் குறைய வேண்டும்.

நன்றி
பாமரன்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *