திருவாரூர் தேர்தல் ரத்து – ஏமாளிகள் நாம்தான் கோழையான அரசியல்கட்சிகள் – ஒத்து ஊதும் தேர்தல் ஆணையம்

 


முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களின் இறப்பிற்கு பிறகு காலியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது , இந்திய தேர்தல் ஆணையம் .


திமுக , அமுமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்ததும் சில சுயேட்சைகள்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததும் அனைவருமே அறிந்ததே .

 

 

இந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் திருவாரூர் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது

 


 

தேர்தல் ரத்து செய்யப்பட காரணம் என்ன ?


தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா  வைத்தியநாதன் அவர்களின் கோரிக்கை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பிவைத்த அரசியல்கட்சி மற்றும் மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது .

 

 

 


கஜா புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள நிவாரப்பணிகளை மேற்கொள்ளவேண்டி இருப்பதனால் 19 தொகுதிகளில் ஏப்ரல் வரை தேர்தலை நடத்திட வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு டிசம்பர் 03 ஆம் தேதி அறிக்கை அனுப்பியிருந்தார் .


 

திமுக வின் உண்மைநிலை என்ன ?



திமுக தேர்தலை உண்மையாக சந்திக்க விரும்புகிறதா இல்லையா என்பதனை புரிந்துகொள்ளவே இயலவில்லை .

 

 


 திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கிறார் , மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்துகின்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தேர்தலை நடத்தவேண்டாம் என திமுக சார்பாக பங்கேற்றவர் கூறுகின்றார் .

 

உச்சநீதிமன்றத்தில் தேர்தலை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்தவரும் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர்தான் .



இதுதான் உண்மையான மனநிலையா?

ஆளும்கட்சிக்கு  இடைஞ்சல் கொடுக்க 20 தொகுதிகளில் தேர்தலை நடத்திட வலியுறுத்தவேண்டிய கட்சியே திமுகதான் . ஆனால் மவுனம் சாதிக்கிறது .

 


 

பயிற்சி ஆட்டத்தை ஆட விரும்பாத பெரிய கட்சிகள்



இந்த ஒரு தொகுதி போட்டியில் திமுக அதிமுக இரண்டும் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை . இதற்கு முக்கிய காரணம் அடுத்து வரவிருக்கிற நாடளுமன்ற தேர்தல் தான் . இந்த ஒற்றை தொகுதியில் கிடைக்கும் முடிவுகள் நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் .

வென்றாலும் அதிக வாக்கு வித்தியாசம் பெற முடியாவிட்டாலும் திமுகவிற்கு பின்னடைவாகவே அது அமையும் . அதிமுக வெல்வது அவ்வளவு சுலபமில்லை . தோற்றால் அது நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் .

ஆகவே தான் இந்த ஒற்றை தொகுதி தேர்தலில் பங்கேற்க திமுக அதிமுக இரண்டு பெரிய கட்சிகளும் தயங்குகின்றன .


 

தேர்தல் ஆணையம் யாருக்காக செயல்படுகிறது ?


தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கோரிக்கை அனுப்பியது டிசம்பர் 03 . அப்போதே அதனை கருத்தில் கொள்ளாமல் , அரசியல்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் தேர்தலை அறிவித்தது ஆணையம் . இப்போது என்ன தேவை ஏற்பட்டதோ  அதே காரணத்தை கொண்டு தேர்தலை ரத்து செய்திருக்கின்றது .

 



இந்திய தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் அதன் செயல்பாடுகளை காணும்போது தன்னாட்சி என்பது உண்மைதானா என எண்ணத்தோன்றுகின்றது . இதற்கு மிக முக்கிய காரணம் தேர்தல் ஆணையம் அதன் கடமைகளில்  சமரசங்களை செய்துகொண்டே வருவதுதான் .


ஆம் மக்களே , உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுள் முடிவடைந்து ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்டன . 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்திட வேண்டியது கட்டாயம் . ஆனால் ஏதேதோ காரணங்களை தேடி தேடி தள்ளிபோட்டுக்கொண்டே போகிறார்கள் .

இப்போது அதே மாதிரியான செயல்பாட்டையே சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கான தேர்தலிலும் செய்கிறார்கள் . இங்கு ஏமாறும் முட்டாள்கள் மக்களாகிய நாம் தான் .

ஏமாறும் முட்டாள்கள் மக்களாகிய நாம் தான்


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *