பிளாஸ்டிக் தடை | முன்னேற்பாடுகளை செய்யாத தமிழக அரசு | Tamilnadu Government lacking in Plastic Ban Preparation

மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ஜனவரி 01 முதல் தமிழகத்தில்  பிளாஷ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது என ஜுன் மாதமே  அரசாணை வெளியிட்டு இருந்தார் . பால் உள்ளிட்ட சில பொருள்கள் மட்டுமே பிளாஸ்டிக் இல் விற்க அனுமதிக்கப்படும் . இந்த உத்தரவு இன்றைய சுற்றுசூழலின் நிலையை மீட்டு எடுப்பதற்கு  போடப்பட்ட உத்தரவாகவே நான் பார்க்கின்றேன் .

 

பிளாஸ்டிக் பையில் பழம் வாங்கிடும் பெண்மணி
பிளாஸ்டிக் பையில் பழம் வாங்கிடும் பெண்மணி

 

ஆனால் ஜனவரி 01 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்திட கூடாதென்பதை  மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையையும் , பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றான பொருள்களை மக்களுக்கு அறிமுகப்படுத்திடும் வேலையையும் இன்னும் அரசாங்கம் கொஞ்சம் கூட செய்யவில்லை . பிறகெப்படி  தமிழகத்தில் உள்ள அனைவரும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திடுவதை நிறுத்திடுவார்கள் ?

 

விளம்பரங்களின் மூலமாக இப்போதே விழிப்புணர்வினை ஏற்படுத்திடவேண்டும்

 

திரை அரங்குகள் , செய்திதாள்கள் , வானொலிகள் , செய்தி சேனல்கள் ஆகியவற்றோடு இணைந்து ஜனவரி 01 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை குறித்தும் மாற்றுப்பொருள்களை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும் .

 

மாணவர்களின் மூலமாக பேரணிகளை நடத்திட வேண்டும்

 

பள்ளிமாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்திடவும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்திடவும் பேரணிகள் நடத்தப்படுவதைப்போன்றே பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வினை மாணவர் பேரணிகளின் மூலமாக கிராமப்புறங்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் .

 

மாற்றுப்பொருள் தயாரிப்பினை ஊக்கப்படுத்திடவேண்டும்

 

தீடிரென ஜனவரி 01 முதல் பிளாஸ்டிக் பைகள் முதல் குடங்கள் வரை தடைசெய்தால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படும் . முறையான மாற்றுப்பொருள்கள் கிடைக்காமல் போனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருள்களையே பயன்படுத்திடும் வாய்ப்பு அதிகம் . ஆகவே மாற்று பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு போதுமான உதவிகளை செய்து இப்போதே மாற்றுப்பொருள்கள் மக்களுக்கு கிடைத்திடும் வண்ணம் ஏற்பாடுகளை செய்திடவேண்டும் .

 

இப்போது மக்கள் அதிக விழிப்புணர்வோடுதான் இருக்கிறார்கள் . அரசு போதுமான அளவு விளம்பரங்களை செய்து மாற்றுப்பொருள்களுக்கான எற்பாடுகளை செய்தாலே பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து குறைத்து பிறகு நிரந்தரமாக அகற்றிடவும் முடியும் .

 

 ஜனவரி 01 வரை காத்திருக்காமல் இன்றே அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் .

 

பாமரன் கருத்து
 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *