நடிப்புச் சுதேசிகள் – போலியானவர்களை விளாசித்தள்ளும் பாரதியார் கவிதை

பாரதியார் ஏன் போற்றப்படுகிறார் என்பதற்கும் பாரதியார் கவிதைகள் இன்றளவும் ஏன் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கும் ஒரே காரணம், தேசத்தின் சமூகத்தின் அவலங்களை குறைகளை தன் கவிதைகளில் கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமில்லாமல் எப்படி இந்த தேசமும் மக்களும் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு எழுதியதால் தான். அப்படிப்பட்ட கவிதைகளில் ஒன்று தான் பாரதியார் எழுதிய “நடிப்புச் சுதேசிகள்” என்ற கவிதை. பாரதி வாழ்ந்த காலத்தில் போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களை கடுமையாக விமர்சித்து எழுதியது தான் இக்கவிதை.    


நடிப்புச் சுதேசிகள்

(பழித்தறி வுறுத்தல்)

 

கிளிக் கண்ணிகள்


நெஞ்சில் உரமுமின்றி்

  நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ — கிளியே

  வாய்ச் சொல்லில் வீரரடீ. 1

 

கூட்டத்திற் கூடிநின்று

  கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளாரடீ — கிளியே

  நாளில் மறப்பா ரடீ. 2

 

சொந்த அரசும்புவிச்

  சுகங்களும் மாண்புகளும்

அந்தகர்க் குண்டாகுமோ? — கிளியே

  அலிகளுக் கின்ப முண்டோ? 3

 

கண்கள் இரண்டிருந்தும்

  காணுந் திறமையற்ற

பெண்களின் கூட்டமடீ — கிளியே

  பேசிப் பயனென் னடீ. 4

 

யந்திர சாலையென்பர்

  எங்கள் துணிகளென்பர்

மந்திரத்தாலே யெங்கும் — கிளியே

  மாங்கனி வீழ்வ துண்டோ? 5

 

உப்பென்றும் சீனிஎன்றும்

  உள்நாட்டுச் சேலைஎன்றும்

செப்பித் திரிவா ரடீ — கிளியே

  செய்வ தறியா ரடீ. 6

 

தேவியர் மானம் என்றும்

  தெய்வத்தின் பக்திஎன்றும்

நாவினாற் சொல்வ தல்லால் — கிளியே

  நம்புத லற்றா ரடீ.

7

 

மாதரைக் கற்பழித்து

  வன்கண்மை பிறர்செய்யப்

பேதைகள் போலுயிரைக் — கிளியே

  பேணி யிருந்தா ரடீ. 8

 

தேவி கோயிலிற் சென்று

  தீமை பிறர்கள்செய்ய

ஆவி பெரிதென்றெண்ணிக் — கிளியே

  அஞ்சிக் கிடந்தா ரடீ. 9

 

அச்சமும் பேடிமையும்

  அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ — கிளியே

  ஊமைச் சனங்க ளடீ. 10

 

ஊக்கமும் உள்வலியும்

  உண்மையிற் பற்றுமில்லா

மாக்களுக்கோர் கணமும் — கிளியே

  வாழத் தகுதி யுண்டோ? 11

 

மானம் சிறிதென்றெண்ணி

  வாழ்வு பெரிதென்றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் — கிளியே

  இருக்க நிலைமை யுண்டோ? 12

 

சிந்தையிற் கள்விரும்பிச்

  சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார் — கிளியே

  மனதி லதனைக் கொள்ளார். 13

 

பழமை பழமையென்று

  பாவனை பேசலன்றியன

பழமை இருந்தநிலை — கிளியே

  பாமர ரேதறிவார்? 14

 

நாட்டில் அவமதிப்பும்

  நாணின்றி இழிசெல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே — கிளியே

  சிறுமை யடைவா ரடீ. 15

 

சொந்தச் சகோதரர்கள்

  துன்பத்திற் சாதல்கண்டும்

சிந்தை இரங்கா ரடீ — கிளியே

  செம்மை மறந்தா ரடீ. 16

 

பஞ்சத்தும் நோய்களிலும்

  பாரதர் புழுக்கள்போல்

துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் — கிளியே

  சோம்பிக் கிடப்பா ரடீ. 17

 

தாயைக் கொல்லும்பஞ்சத்தைத்

  தடுக்க முயற்சியுறார்

வாயைத் திறந்து சும்மா — கிளியே

  வந்தே மாதர மென்பார். 18

தேடி சோறு நிதம் தின்று – பாரதி பிறந்தநாள் பகிர்வு

காலத்துக்கேற்ப வேஷம் போட்டு மாலை மரியாதைகளை பெற்று உள்ளதால் கள்ளராய் புறத்திலும் பெரியவராய் திரிபவர்கள் பலர் பாரதியார் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உள்ளமே தம் கள்ளத்தை உணர்ந்து தமது நிலைக்கிரங்கி வெட்கித் தலை குனியும்படி பழித்து அறிவுறுத்துவனவாக அமைந்த பாடல்களைக் கிளிக் கன்னிகளாகப் பாடித் தந்திருக்கிறார் பாரதியார். 

 

சோலையில் திரியும் பசுங்கிளியை நோக்கித் தாளத்துடனும் இசையுடனும் பாடுவது போல அமைந்த மூன்றடிப் பாடல்கள் கிளிக் கண்ணிகள் எனப்படும். அடி தோறும் கிளியே கிளியே என்று விளிப்பது இப்பாடல்களின் தனி சிறப்பு. 

 

நம் நாட்டிலே சொல்லில் வீரராகவும் செயலில் வஞ்சகராகவும் பலர் இருக்கிறார்கள். இவர்களுடைய உள்ளத்தில் வீரமும் இல்லை. நேர்மை ஒழுக்கம் என்ற பண்புகளும் இல்லை.. கூட்டத்திலே சபைகளிலே கூடி நின்று கொள்கைகளையும் திட்டங்களையும் விசாலமாக பேசுவதுடன் இவர்கள் நின்று விடுவார்கள். அப்படிப் பேசியதை அன்றே மறந்துவிடும் இந்த வஞ்சகர் செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். தமக்கே தாம் குருடராக வாழுபவர்களுக்குச் சொந்த அரசாட்சியும் அதனால் கிடைக்கும் சுகங்களும் எப்படி உண்டாகும். ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பேடிகள் எங்கேனும் இன்பம் காண்பதுண்டா? இரண்டு கண்களிலிருந்தும் அவற்றில் பார்வையை இழந்த பெண்கள் கூட்டம் போல இவர்கள் ஏதாவது கருத்தின்றிப் பிதற்றுவார்கள். இத்தன்மையான நடிப்புச் சுதேசிகளைப் பற்றி பேசுவதனால் ஏதும் பயனுண்டாமோ? 

 

தேசிய இயக்கம் தீவிரமாகப் பரவிய அக்காலத்தில் பாரத நாட்டிலே உள்ள தேசபக்தர்கள் பிற நாட்டுத் துணிகளையும் அந்நியருடைய “மில்” துணிகளையும் போட்டுக்கொண்டு உள்நாட்டுக் கைத்தறி துணிகளை ஆதரித்து வந்தனர். மஹாத்மா போன்ற பெரியார்கள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறை புகுந்த காலம் அது. 

 

ஆலைத்துணி – கதர் – நம் நாட்டுத் துணி, உப்பு, சீனி என்று பலவற்றை கூறிக்கொண்டு தாமும் உண்மையான சுதந்திர வீரர்போல பேசித் திரிகிறார்கள். மந்திரத்தால் மாங்கனி வீழ்த்தியதுபோல இருக்கிறது இந்த நெஞ்சுரம் அற்றவர் செயல். 

 

பெண்களின் மானம் தெய்வ பக்தி என்றெல்லாம் இந்த வஞ்சகர் பேசுகிறார்களே! உண்மையில் இவர்கள் அவற்றில் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் அந்நியர் நம் பாரதப் பெண்களின் கற்பை அழித்துக் கொடுமைகள் செய்யப் பார்த்துக்கொண்டு பேதையர் போல் வாளா இருப்பாரா? தேவியின் கோயிலிலே சொல்லொணாத கொடுமைகளை எல்லாம் அந்த அந்நியர் செய்யும்போது தங்கள் உயிரே பெரிதென்று அஞ்சியோடி ஒளித்தார்களே! இவர்களா சுதந்திரப் பற்றுக்கொண்ட உண்மைச் சுதேசிகள்? 

 

அச்சம் பேடித்தனம் அடிமைப் புத்தி என்பவற்றையே உயர்ந்த பண்புகளாகக் கொண்ட இவர்கள் ஊமைச் சனங்களன்றி வேறு எப்படி இருக்க முடியும். இவர்களிடம் ஊக்கமோ மனத்திண்மையோ சத்தியத்தில் உறுதியான நம்பிக்கையோ கிடையாது. இவர்கள் மனித வேடந்தாங்கிய விலங்குகள். ஒரு கண நேரங்கூட இந்தப் பூமியில் வாழும் தகுதி இவர்களுக்கில்லை. மானம் போனால் போகட்டும், நாம் எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்றெண்ணும் பாவிகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டிய இந்த உலகத்திலே இருக்க தகுதி உண்டா? 

 

உள்ளத்தில் கள்ளாசை; உரையில் சிவநாமம் என்பதுபோல சொல்லளவில் மாத்திரம்தான் “வந்தேமாதரம்” என்பரேயன்றி மனதில் அதனைக் கொள்ளார். நமது நாட்டின் பழம் பெருமையைப் பற்றி பேசுவார்கள். ஆனால் நமது பாரத நாடு பண்டு எத்துனைப் பெருமையோடு இருந்தது என்பதை அறிவிலிகளான இவர்கள் எப்படி அறிவர். 

 

எப்படி இழிந்த வெளியானாலும் நாணாது பொருள் சேர்ப்பதிலேயே கண்ணாயிருக்கும் இந்தக் கயவர்கள் பொது மக்களின் அவமதிப்புக்குப் பாத்திரராகி நாட்டில் சிறுமைப்பட்டு ஒழிவர். உடன்பிறந்தவர்கள் துன்பப்பட்டுச் செத்தாலும் இந்த வஞ்சகரின் நெஞ்சினிலே இரக்கம் உண்டாகாது. செம்மை நெறி மறந்த பாவிகள் இவர்கள். 

பஞ்சத்தினாலும் நோயினாலும் பாரத நாட்டு மக்கள் புழுக்களைப்போல் துடித்துச் சாவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே! தாயினும் மேலாக மதிக்கத் தகுந்த தாய்நாடு பஞ்சத்தில் உழல்வதை தடுக்க ஒரு துரும்பினைக்கூட எடுத்துப்போட மனமிசையாத இந்தப்பாவிகள் அந்தோ! வந்தே மாதரம் என்று வாய் கூசாது சொல்கிறார்களே!  என்றுதான் இவர்கள் திருந்துவரோ!

பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *