காசி – பாதசாரி – சிறுகதை
“எங்காவது காட்டுக்குள்ளே… மலைப்பக்கம் ஓடிப் போயிணணும்”.
“போயி”
“ஆதிவாசிகளோட ஆதிவாசியாகணும்”
“முட்டாள், ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும் பொறுப்பு, சுதந்திரம் பத்தின பயம்
இருக்காதுங்கிறியா? அங்கேயும் தாளம் இருக்குதுடா… கட்டுப்பாடு இருக்குது…”
காசி பதில் பேசவில்லை. நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென சட்டையைக் கழற்றினான். இடுப்பில் லுங்கியை இழுத்து நழுவவிட்டான். ஜட்டி போட்டிருக்கவில்லை. படுபாவியின் வலது தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை, கனம். லுங்கியை
பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன். பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில் புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன்.
இரவு பதினோரு மணிக்கு விழித்துக்கொண்டான். இரவு உணவு சாப்பிடவில்லை. நான் கலவரப்பட்டு வருத்தமாக உட்கார்ந்திருந்தவன் அருகே போனேன். மொட்டைத் தலை சொட்டையில்லாமல் வியர்த்திருந்தது. தோளைத் தொட்டூ பரிவாக, கட்டிலோரம் உட்கார்ந்தேன். எழுந்து உட்கார்ந்தான். இடுப்பில் லுங்கி இருந்தது, இருக்காமல். முகம் உப்பியிருந்தது. ‘பசிக்கிதா
என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் – எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை, பெருங்குரலெடுத்து முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது. பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்… அவன் முகத்தை அப்பி அடக்கப் பார்த்தேன். முடியவில்லை. ஊ ஊ ஊ என அரைஅணி நேரம் அடங்கவில்லை. மழைவிட்ட
விசும்பல் மாதிரி வேறு… நான் லைட்டை அணைத்துவிட்டேன்.
“நல்லாத் தூங்கினியா?”
“தூங்கினேன்” என்ற காசியின் பதிலில் வாட்டம். காலையில் எட்டூ மணிக்கே சாப்பிடப்
போனோம்.
” என்ன காசி, சொல்டா…”
“ராத்திரி ஒரு கனவு… மனசு கஷ்டமாயிருக்குடா..”
” என்ன, சொல்லு!”
“வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு… மார்லே மொகஞ்சு மொகஞ்சு பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா… புணர்றா மாதிரி… முகம் சரியா தெரியலே. விழித்தபோது அந்தக் கனவு முகம் மனசைக் கஷ்டப்படுத்துச்சு.”
“ஏதாவது சினிமா போலாமா?” என்று பேச்சை மாற்றினேன்.