காசி – பாதசாரி – சிறுகதை
தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி. நடந்து சென்றபோது காசியைக் கேட்டேன்.
“டிம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா?” “எதையும் தொடர்ந்து செய்ய
முடியலே…காபிக் கரண்டியாலே வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே எனக்கு முடிவுக்கு வர முடியலே…” காபியா, டீயா என்று கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால் சாவை எடுத்து அளந்து
பார்த்திருக்கிறான். சுவரெட்டிக் குதித்தோம். “தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்… எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டூ இருக்கற மாதிரி… சில சமயம் எனக்குள்ளே இருக்கற ‘நான்’ தான் நிஜம் – இந்த வெளியிலே ‘நான்’ சூட்சுமம்னு
பயமா தோணுதடா…”
“நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும் படிக்கறதில்லையா காசி?” “எப்பவாவது படிப்பேன். செய்தி, படமாகத்தான் எல்லாம் எனக்குள்ள மிச்சமாகுது. பிடிப்பே இல்லை. வெத்து ஒலக்கையும், ஒரலுமா மனசும் புத்தியும் அடிச்சிட்டுக் கெடக்கு…” பொது நூலகம் தாண்டி தார்ச் சாலையை நெருங்கினோம். “குணா, நீ இங்க வந்தா வராமப் போகாதே. விட்டுக்கு வா. என்னோட கல்யாண
மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல் பண்றதா தன்ராஜ் சொன்னான்” என்று கைகளைப் பிடித்துக்கொண்டான் காசி.
எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான் இருக்கிறான். கர்ப்பம்விட்டூ வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில் முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ, வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின் இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா விட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும்.
காலேஜ் பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். ‘ஹிப்பாக்ரசியை அம்பலப்படுத்தி மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டுூ கில்லாடிகளாக உணர்ந்து குதூகலித்துத் திரிந்த
எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது. வித்தியாசமானவர்களாக மாற்றிமாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம். ‘ஆதவனை ரசித்துப் படித்தோம். ‘புவியரசு வை நேரில் சந்தித்தோம். காசிதான் கூட்டிப் போனான். மெல்லமெல்ல ஜானகிராமன், லா.ச.ரா. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்,சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். ‘மெளனி’ புரியாதபோதும் ‘பயங்கரம்’ என்ற பாவனை
பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப் போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர், பித்துக்குளி முருகதாஸ், ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்கஆரம்பித்துவிட்டேன். இப்போது ஜே.கே.வை அடிக்கடி படிக்கிறேன். அரசாங்க வேலை கிடைத்து கடலூர் போன பின்தான் காசியின் நெருக்கத்தை இழந்துவிட்டேன். ‘ஆவேசமாகப் பாய்ந்து அரைக்
கிணறு தாண்டும்’ சுபாவம் சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில், கனிகள் அல்லது ஐசக்நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான் என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள் வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது