காசி – பாதசாரி – சிறுகதை
ஆனாலும், தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை, துவைத்தல், ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான். பைத்தியக்காரன்! பெய்த
பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக, சில நாட்கள் கழிவதிலிருந்து, தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான். சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு போகும்போது, பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச்
சரடில் இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான்.
எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு -பிரைடூ ரைஸ் சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும் பிடித்திருந்தது, எனக்கு பிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான் நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான். தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப்
படித்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய் அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி வந்தால் போதும், அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட
பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே ‘சுயம் நசித்து’ விட்ட நான்கைந்து நண்பர்கள், எழுத்து, படிப்பு இதெல்லாம் மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றான். என்ன இன்னும் தொடர்ந்து
படித்துக் கொண்டிருக்கிறாய்தானே? என்று கேட்டுவிட்டு கடைசி ‘சிப்பையும் முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான்.
திடீரென தான் சமீபத்தில் கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும், நோ-ப்ராப்ளம் என்றான். ரமணரின் பரவச முகம்
ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை பில் கால் பெருவி। ௦ பாம்பு கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக் கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம். ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி, மலைகள் தாண்டி, விண்ணில்
பறந்து போவது மாதிரி, கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன், அடிக்கடி திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென, பரீட்சைக்குப் படிக்காமலேயே
போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான்
கனவுகளை நான்கு நாட்களுக்குக் கவனித்து, விடிந்ததும் ஒரு குயர் ரூல்டூ நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தால், ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால்
கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி, நிச்சயம் வராதா என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல முடியாதுதானே என்று கேட்டான்.
கத்தி, கபடாக்கள், முள் கரண்டி அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன பிரைடூ ரைஸ் தட்டுகள். அநேகமாக என் பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும்.