உளவு – ஊழல் – அரசியல் | Ulavu oolal arasiyal | Savukku Shankar | Book Intro

புத்தகம் : உளவு – ஊழல் – அரசியல்
எழுதியவர் : சவுக்கு சங்கர்
விலை : ரூ 200

சவுக்கு இணையதளம் பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

உளவு – ஊழல் – அரசியல் புத்தகம் படிப்பதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும் :

அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாக சேர்ந்த ஒருவன் தனது துறையில் நடக்கும் ஊழல்கள் குற்றங்கள் குறித்து அறிந்ததும், வெகுண்டெழுந்து ஊழல்களை குற்றங்களை வெளிக்கொண்டு வந்தால் அதிகார வர்க்கம் அவரை என்ன பாடுபடுத்தும் என்பதனையும் அதிலிருந்து அந்த நபர் வெளிவர பட்ட கஷ்டங்களையும் அறியலாம். இது நூலின் ஆசிரியர் சவுக்கு “சங்கர்” என்பவருக்கு நடந்த உண்மை அனுபவம்.

சவுக்கு சங்கர் பற்றிய பிற தகவல்கள்:

2008 இல் ஒரு தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் வெளியாகிறது. அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், இவரோடு அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் வெளிவருகின்றன. அந்த பேச்சு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த, விசாரனை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவின் அறிக்கை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த ஏ.சங்கர் என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கர், புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்தார்.

பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து “தமிழக மனித உரிமைக் கழகம்” என்ற இயக்கத்தின் சார்பில் செயல்பட்ட “சவுக்கு” என்ற இணையதளம் மூலமாக பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்தனர். இதற்க்கு ஆதரவாக பல அதிகாரிகள் , அரசியல்வாதிகளும் கூட பல தகவல்களை கொடுத்ததாக தெரிகிறது.

சவுக்கு என்ற இணையதளம் மூலம் 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான மிக முக்கிய உரையாடல் ஒன்றை வெளியிட்டு அதன் பின்னணி சதிவலைப்பின்னலை வெளிக்கொண்டு வந்து சவுக்கு சங்கர் என்ற பெயரில் தற்போது பலரால் அறியப்பட்டு வருகிறார்.

ஊழல் செய்யும் நபர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் சவுக்கு சங்கர் தன் வாழ்நாளில் பெற்ற அதிகார வர்கத்தின் அடக்குமுறைகளை, அரசியலை, அசாதாரண அனுபவங்களை தனது இந்தப் புத்தகத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஊழல் – உளவு – அரசியல் என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்புத்தகத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் அடக்குமுறை, சொத்து குவிப்பு வழக்கின் திரிபுகள், உயர் அதிகாரிகளை ஜெயலலிதா தண்டித்த விதம் போன்றவற்றையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி செயல்படுத்தப்பட்ட செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம், உளவுத்துறை, ஊழல் ஒழிப்புத்துறை, நுண்ணறிவுத்துறை போன்றவற்றின் முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக விவரித்துள்ளார்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkilirunthu Oru Sooriyan

இன்னும் பல புத்தக அறிமுகங்களுடன் ,
பாமரன்