Site icon பாமரன் கருத்து

கருணாநிதியை பிடிக்காதவர்கள் படிங்க | What Karunanithi did in his life?

கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

இந்த பதிவினை படிக்கும் சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் கருணாநிதி குறித்து வைத்திருக்கும் முடிவினை கழற்றி வைத்துவிட்டு இந்த பதிவினை படியுங்கள்

 

அண்மைகாலமாகவே ஆளுமைகளின் சாதனைகளை இளையதலைமுறைகளுக்கு கூறாமல் அவர்கள் செய்த பிழைகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவர்கள் ஒன்றுமே செய்திடவில்லை என்பது போன்ற எண்ணத்தை இளைய தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த பதிவினை படிக்கும் சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் கருணாநிதி குறித்து வைத்திருக்கும் முடிவினை கழற்றி வைத்துவிட்டு இந்த பதிவினை படியுங்கள் . அவர் அரசியல்வாதி மட்டுமல்ல என்பதனை உணர்ந்துகொள்ளுங்கள். அவர் தமிழுக்கும் தமிழகத்திற்கும் செய்த பல நன்மைகளில் சிலவற்றை நினைவு கூறுவோம்

தமிழை காத்தவர் கருணாநிதி

 

கடந்த காலங்களில் ஒரு குறிபிட்ட மக்களிடத்தில் பரவிக்கிடந்த மொழியுணர்வும் , இன உணர்வும் இன்று தமிழக இளைஞர்கள் அனைவரிடத்திலும் பெருகி கிடக்கின்றது . நாடு சுதந்திரம் அடைந்ததும் மாநில இன உணர்வுகளை ஒழித்து இந்தியராக ஒரு குடைக்குக்கீழே கொண்டு வருவதற்காக இந்தியை திணிப்பது போன்ற பல வேலைகள் அதிகாரப்பூர்வமாக நடந்தன . அத்தனையையும் முறியடித்து இன்று நாம் கொண்டாடுகின்ற தமிழ் என்கிற மொழியையும் தமிழன் என்கிற இன உணர்வையும் கட்டிக்காத்தது திராவிட கட்சிகள் தான் . அதிலும் குறிப்பாக அண்ணாவிற்கு பிறகு ஆக்கபூர்வமாக செயல்பட்ட கருணாநிதி தான் என்றால் மிகையாகாது .

தினமணி நாளிதழில் கருணாநிதியின் தமிழ்ப்பற்று அழகாக பட்டியலிடப்பட்டுள்ளது , உங்களுக்காக

தமிழுக்கு கருணாநிதி என்ன செய்தார்? தமிழ் கலாச்சாரத்துக்கு கருணாநிதி என்ன செய்தார்? என்று யாரேனும் கேட்டால் அவர்கள் கருணாநிதியைப் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டைப் பற்றியும் ஒன்றும் அறியாதவர்கள் என்று அர்த்தம். அவருக்குத் தெரிந்தது மொத்தமும் அரசியல்வாதி கருணாநிதியை மட்டுமே! கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு ஆறாக் கோபம் இருக்கலாம். ஒரு தலைமுறை மொத்தமும் இந்தி கற்றுக் கொள்ள முடியாமல் மூளைச் சலவை செய்தவர் கருணாநிதி என்ற குற்றச்சாட்டு அவர் மீதிருந்த போதும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் தமிழ் மீது அவர் கொண்ட காதல் வெளிப்படுவதைக் காணலாம்.

        >> இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு”  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

        >> சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. “அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்” என்றார்.

        >> மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது. அதுமட்டுமல்ல அதுவரை தமிழ்த்தாய்க்கு உருவில்லாமலே இருந்து வந்த நிலையில் தமிழன்னைக்கு உருக்கொடுக்கும் நிகழ்வை முன்னெடுத்ததும் கலைஞர் கருணாநிதியே!

        >> தமிழ்த்தாய்க்குக் கோயில் எழுப்பவேண்டும் என்பது கம்பனடிப்பொடி சா.கணேசன் அவர்களது நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் 1975 ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிப்பொடி சா. கணேசனும், சிற்ப கலாசாகரம் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோயிலின் இறுதிக் கட்டப்பணிக்கு தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பிறகு மு. கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய்க் கோயில் 1993 ஏப்ரல் 21 அன்று திறக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறது.

        >> சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான். ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

        >> தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

        >> கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

        >> இயல், இசை, நாட்டியம் எனும் முத்தமிழ்க் கலைகளை வளர்க்க ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் மறக்கடிக்கப்பட்ட பழந்தமிழர் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டியவர் கருணாநிதி.

கருணாநிதியின் தமிழார்வத்துக்கும், தமிழைக் கையாளத் தெரிந்த எழுத்து வன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தவை என பராசக்தி, மனோகரா, பூம்புகார் திரைப்பட வசனங்களைக் குறிப்பிடலாம். அந்த வசனங்களைக் கேட்டு எழுச்சி கொள்ளாதோர் எவருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு கருணாநிதியின் தமிழில் அடுக்குமொழியும், கோபக்கனல் நெருப்பும், குறும்புமாக வசனங்கள் மாறி மாறி உணர்வுகளைச் சங்கமிக்கும்.

தமிழகத்தை செதுக்கியவர்களில் ஒருவர்

 

இந்தியாவை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர்களாக காந்தி , நேரு , அம்பேத்கார் , வல்லபாய் படேல் ஆகிய நால்வரை குறிப்பிடுவார்கள் . அதைப்போலவே தமிழகம் இன்றும் கல்வியில் , பொருளாதாரத்தில் , சமூக நீதியில் சிறப்பானதாக இருப்பதற்காக பாடுபட்டவர்களை பட்டியலிட்டால் அதில் பெரியார் , அண்ணா , காமராசர் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு .எப்படி அந்த நால்வர் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா வல்லமை கொண்ட அற்புதமான நாடாக மாறியிருக்காதோ அதனைபோலவே தான் இந்த நால்வர் இல்லாமல் போயிருந்தால் தமிழகம் இத்தனை சிறப்பானதாக மாறியிருக்காது .

13 வயதிலேயே சமூக வாழ்விற்கு வந்தவர் கருணாநிதி

 

13 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் , அதிகபட்சமாக பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டிருப்போம் அல்லது வேறு ஏதாவது செய்து கொண்டிருப்போம் . ஆனால் கருணாநிதி என்னும் சிறுவனோ தனது 13 ஆம் வயதிலேயே சமூக நடவெடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தனது வட்டார மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை ஏற்படுத்தினார் . பின்னர் இதே அமைப்புதான் அனைத்து மாணவர் கழகம் என மாநில அளவில் விரிவடைந்தது . இந்த அமைப்பின் மூலமாக மொழி ஆற்றலையும் இன உணர்வினையும் பல இளைஞர்கள் பெற்றனர் .

1938 இந்தி எதிர்ப்புப் போர்தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களைக் கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார். இதுவே தலைவர் கலைஞர் பொது வாழ்வில் எடுத்து வைத்த முதல் அடி எனலாம்.

1940 களிலேயே “தமிழ்நாடு” “தமிழ்நாடு மாணவர் அமைப்பு”போன்றவைகளை ஏற்படுத்தி மாணவர் ஒற்றுமையை வலுப்படுத்த கடுமையாக பாடுபட்டார் .

1941 இல் இந்த அமைப்புகள் தஞ்சை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிறுவ கடுமையாக பாடுபட்டார் .

பத்திரிகையாளராக கருணாநிதி

 

மாணவர்களின் எழுத்தாற்றலை செழுமையாக்க 1941 இல் ( 13 ஆம் வயதில் ) மாணவ நேசன் என்னும் பத்திரிக்கையை கையெழுத்து ஏடாக தொடங்கினார் .

இதன்பிறகு முரசொலி என்னும் பத்திரிகையை துவங்கி அது இன்றுவரை தொடர்கின்றது .

கையெழுத்து பத்திரிக்கை குறித்து பாரதிதாசன் இவ்வாறு கூறுகிறார் ” கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பயித்தியக்காரத்தனமோ அவ்வளவு பயித்தியக்காரத்தனம் கையெழுத்து ஏடு நடத்துவது ” என்றார் .

விடுவாரா கருணாநிதி ” மாணவர்கள் நடத்திடும் கையெழுத்து ஏடுகளால் நாடு ஒரேயடியாக முன்னேறிவிடும் என்று யாரும் கூறவில்லை , சிறுதுளி பெருவெள்ளம் , பலர் சேர்ந்ததே நாடு . அந்நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் . அவர்கள் தங்களது எண்ணங்களை செழுமை படுத்திக்கொள்ள மெருகேற்றிக்கொள்ள கையெழுத்து ஏடுகள் வாய்ப்பளிக்கின்றன . பெரிய பத்திரிக்கைகள் இளம் எழுத்தாளர்களை ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் அந்த பத்திரிகைகளுக்கு எழுதுகின்ற அளவிற்க்கான அனுபவத்தை கையெழுத்து ஏடுகள் தருகின்றன ” என்றார்.

அப்போது தொடங்கிய ஆர்ப்பரிக்கும் பதில்கள் அளிக்கும் பழக்கம் பிற்காலங்களில் அவரிடம் இருந்து வெளிப்பட தவறவேயில்லை .

வசனகர்த்தாவாக கருணாநிதி

 

கருணாநிதி அவர்கள் பன்முகம் கொண்ட மாமனிதர் என்றால் மிகையாகாது . இனியொரு மனிதன் அவரைபோல பிறப்பது அரிதுதான் .

பல துறைகளில் சாதித்த கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவராக இருந்தார் . எப்படி இந்த நடிகருடைய படம் , இயக்குனருடைய படம் என பெயர் போடும்போதும் விளம்பரபடுத்தும் போதும் போடுவார்களா அதனைபோலவே கருணாநிதி வசனம் எழுதிய படம் என போடப்படும் அளவிற்கு சிறந்து விளங்கினார் .

பராசக்தி வசனம்

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்
கோவில் வேண்டாம் என்பதற்காக அல்ல

கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகபூசாரியை தாக்கினேன்
அவன் பக்தன் என்பதற்காக அல்ல

பக்தி பகல் வேசமாக ஆகிவிட்டதை கண்டிப்பதற்காகஎன்னும் வசனங்கள் பட்டையை கிளப்பியதோடு மட்டுமல்லால் மக்களிடம் விழிப்புணர்வையும் எற்படுத்தின

அதனைபோலவே மனோகரா , பூம்புகார் என நீண்டுகொண்டே போனது அவரது வெற்றிகரமான வசன வெற்றிகள் .

கருணாநிதியின் பதில்கள்

 

கலைஞர் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லுவதில் வல்லவர் . அந்த திறமை அவருக்கு பத்திரிகையாளர் சந்திப்பிலும் சட்டமன்ற விவாதங்களிலும் பெரிய அளவிற்கு உதவியிருக்கின்றன .

அதனைபோலவே கருணாநிதி மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் , ஒருமுறை மருதுவரிடம் செல்லும்போது

மருத்துவர் : மூச்சை இழுங்க

கருணாநிதி : மூச்சை இழுக்கிறார்

மருத்துவர் : மூச்சை விடுங்க
கருணாநிதி : (சிரித்துக்கொண்டே) மூச்சை விட்டுவிட கூடாதுனு தான உங்ககிட்டயே வந்தேன்
மருத்துவர் கொஞ்சநேரம் வாயடைத்துப்போனார் .

சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார் என கேட்கப்பட்டபோது “யோசிக்காமல் பெருந்தலைவர் காமராசர் தான் ” என பதிலளித்து அசத்தினார் .

கருணாநிதி – அனந்தநாயகி உரையாடல்

கருணாநிதி : நாங்கள் முன்பு விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டு , ஒருநாள் அடையாள போராட்டம் தான் நடத்தினோம் . அதற்கே எங்களை பிடித்து மூன்றுமாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள் காங்கிரஸ்காரர்கள்

அனந்தநாயகி : அப்படி போட்டதால்தான் இன்றைக்கு இங்கே வந்து அமர்ந்திருக்கிறீர்கள் (ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் )
கருணாநிதி : அதனால் தான் நாங்கள் அப்படி செய்வது இல்லை , சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்துவிடுகின்றோம் .

எமர்ஜென்சியை அதிரடியாக எதிர்த்த கருணாநிதி

 

எமர்ஜெண்சி காலக்கட்டங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டபோது மிகவும் அதிரடியாக இந்திராகாந்திக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார் . அந்த காலகட்டத்திதான் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன .பல திமுகவினர் கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது . ஆகையால் ” அண்ணா நினைவு தினத்திற்கு வர முடியாதவர்கள் ” என்ற தலைப்பில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது சமயோஜிதம் .

வெண்டைக்காய் உடலுக்கு நல்லது , ரஸ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி ஆராய்ச்சி ” என தலைப்புகளை வைத்து அதிரடி காட்டினர் .

எமர்ஜென்சி காலகட்டத்தின்போது தமிழகத்தில் மட்டுமே ஓரளவாவது சுதந்திர காற்று வீசியதாக குறிப்பிடுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள் .

கருணாநிதியின் மீதான விமர்சனங்கள்

 

கருணாநிதி எந்த அளவிற்கு சாதனையாளரோ அதனைபோலவே விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் . அவர்மீது பிறர் விமர்சனம் வைப்பதனை எப்போதும் அவர் வரவேற்கவே செய்வார். அதற்க்கு முடிந்தவரையில் பதில் அளிக்கவும் தவற மாட்டார்

ஈழத்தமிழர்கள் மீதான போரினை தடுக்க முறையாக செயல்படாதது , குடும்ப உறுப்பினர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தில் அதிக முக்கியத்துவம் அளித்தது , அடிக்கடி வந்துபோன ஊழல் குற்றசாட்டுகள் , வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது என பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன .

ஒரு அரசியல்வாதியாக மட்டுமே கருணாநிதி மீது குற்றச்சாட்டுக்களை வைக்க முடியும் . ஆனால் கருணாநிதி அரசியல்வாதி என்கிற ஒற்றை கூட்டுக்குள் அடைந்தவரல்ல. அவருடைய இலக்கியப்பணி , இலக்கியவாதிகளை பேணிக்காத்தல் , தமிழுக்கு செய்த தொண்டு , சமூக பணிகள் , வசனகர்த்தா பணி என பன்முக தன்மை கொண்டவர் .

கருணாநிதி அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என பேசுபவர்கள் அவரை பற்றி அறியாமல் பேசுகிறார்கள் என்பதே உண்மை . எந்தவொரு மனிதரிடமும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் . நாம் நல்லதை குறிப்பிட்டு பாராட்டிடும்போது தீமைகள் ஒடுங்கிப்போகும் .

இந்த பதிவு கருணாநிதி அவர்கள் குறித்த சில தகவல்களை தந்திருக்கும் என நம்புகின்றேன் .

அவர்குறித்த விமர்சனங்களையும் உங்களுக்கு தெரிந்த விவரங்களையும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்

ஏன் கருணாநிதியை பிடிக்கும்?

 காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா ?

கருணாநிதி குறித்து தலைவர்கள் சொன்னது?

கலைஞர் கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version