சில நொடிப்பொழுதில் நடந்துவிடும் செயல்களால் கௌரவம் போய்விட்டதாக எண்ணுகிறார்கள் பலர். அதற்காக எதையேனும் செய்து பழி தீர்க்க முடிவு செய்கிறார்கள். பல சமயங்களில் கௌரவத்தின் பெயரால் கொலைகள் கூட அரங்கேறுகின்றன.

அண்மையில் சில காவல்துறை அதிகாரிகளின் தவறான செயலினால் தந்தை மற்றும் மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். தமிழகத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றமும் கூட இந்த செயலினை கடுமையாக கண்டித்து பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறது. அத்தனையையும் தாண்டி நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் இதில் இருக்கிறது. வெறுமனே காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல நம்மைப் போன்ற சாதாரண பொதுமக்களும் கூட அதனை கவனித்து செயல்பட்டால் வாழ்வில் பல சிக்கல்களை தவிர்த்து நல்ல முறையில் வாழ முடியும்.
இந்தப்பதிவை முழுமையாக படியுங்கள், உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
கௌரவம்

காவல்துறை அதிகாரிகளின் பேரில் கொடுக்கப்பட்டுள்ள புகாரை பார்க்கும் போது பல்வேறு சமயங்களில் “போலீஸிடமே நீ அப்படி பேசுவாயா” “காவல்நிலையத்திலேயே அப்படி பேசுவாயா” என்ற ரீதியில் தான் பிரச்சனை எழுந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் கடைகளை அடைக்கச்சொல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல்துறை அதிகாரிகள் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாக கருதிவிட்டார்கள். அவர்களின் அத்தகைய எண்ணம் தான் இருவரின் மரணம் வரைக்கும் இட்டுச்சென்றிருக்கிறது.
ஒருவேளை காவல்துறை அதிகாரிகள் இதனை ஒரு சாதாரணமான விசயமாக எடுத்துக்கொண்டு வழக்குப்பதிவு செய்ததோடு நிறுத்திக்கொண்டு நீதியின் வழியில் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்திருந்தால் நீதி காக்கப்பட்டு இருக்கும். இரண்டு அப்பாவி நபர்களின் உயிரும் காக்கப்பட்டு இருக்கும்.
கௌரவம் எப்போதும் போலியானது தான்

உண்மையான கௌரவம் என்பது இங்கு யாருக்குமே கிடைப்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எண்ணிப்பாருங்கள், இதே காவல்துறை அதிகாரிகள் அவர்களின் உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்கி தலைகுனியாமளா இவ்வளவு நாட்கள் பணி செய்திருப்பார்கள், இவர்களை திட்டிய உயர் அதிகாரி அமைச்சரிடம் வாங்குவார், அமைச்சர் முதல்வரிடம் வாங்குவார், முதல்வர் அவர்களின் வீட்டாரிடமோ அல்லது அவருக்கும் மேல் உள்ளவர்களிடமோ வாங்குவார்.
உதாரணத்திற்கு, ஒரு ஆள் மிகப்பெரிய நபர் என பொதுவெளியில் மதிக்கப்படுவார். ஆனால் அவரது மனைவியிடமோ அல்லது அவரின் பிள்ளைகளிடமோ அந்த மரியாதையை பெற முடியாது. அதற்காக அவர் கோபப்படுவது இல்லை, காரணம் அவர்களை அவருக்கு பிடிக்கும் என்பதனால் தான். நமது கௌரவம் பல நேரங்களில் பாதிப்பிற்கு உள்ளாகிறது தான். அது நம்மை பிடித்தவர்களால் நடக்கும் போதோ அல்லது நம்மைவிட அதிகாரம் மிக்கவர்களால் நடக்கும் போதோ நாம் அதனை பெரிதாக கண்டுகொள்வது இல்லை.
ஆனால் நம்மை விட குறைந்தவர்கள் என நாம் நினைக்கும் ஏதோ ஒருவரால் அது நடக்கும் போது நாம் அதனை பொறுத்துக்கொள்வது இல்லை. நம்முடைய ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி அவர்களை தாக்கி அழித்துவிட நினைக்கிறோம். அதுதான் இருவரின் மரணத்திலும் அரங்கேறி இருக்கிறது. கௌரவம் என்பது போலியானது என்பதை நாம் உணரவேண்டும். அனைத்து அதிகாரமும் இருக்கும்போது அமைதியாக நடந்துகொள்ளும் ஒருவர் தான் பிறரால் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார்.
இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் யாருக்கும் தொந்தரவில்லாமல் நம்முடைய வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு சென்றுவிட முடியும்.
நீங்கள் கௌரவத்தை பெரிதாக நினைப்பவரா? உங்களிடம் யாரேனும் அப்படி நடந்துகொண்டால் பழிவாங்க நினைப்பீர்களா? பதிவிடுங்கள்.

எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!