Real Hero Dheeran Chinnamalai | நிஜ நாயகன் வீரன் தீரன் சின்னமலை

அதுவரை தீர்த்தகிரி என்னும் இளைஞராய் அறியப்பட்டு இருந்தார் அந்த இளைஞர் . சிலம்பாட்டம் , மல்யுத்தம் , வாள்வீச்சு , வில்வித்தை என அக்காலத்திலேயே சிறந்து விளங்கியபடியால் சிறந்த வீரர் என்கிற ரீதியில் அவரது புகழ் இயல்பாக, தான் பிறந்த ஊரான மேலப்பாளையம் தாண்டியும் பரவத்தொடங்கியது .

பிறந்தநாள் : ஏப்ரல் 17, 1756
மறைந்தநாள் : ஜூலை 31, 1805
பிறந்த இடம்:மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
பணி: கொங்கு தலைவர், பாளையக்காரர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்

அப்போதிருந்த சூழ்நிலையில் கொங்கு மண்டலத்தில் வரிவசூல் செய்யும் உரிமை மைசூர் சமஸ்தானத்துக்கு இருந்துவந்தது . ஏற்கனவே ஏழ்மையால் பாதிக்கப்பட்டு கிடந்த மக்களை கண்டே வாழ்ந்து வந்திருந்த அந்த மாபெரும் வீரரின் களம் , விளையாட்டு களத்திலிருந்து போர்க்களத்திற்கு அவரை இட்டுச்செல்கிறது .

மைசூர் சமஸ்தானத்திற்க்கு வரிவசூல் செய்துகொண்டுபோவாரை திடீரென ஒரு வீரமான இளைஞன் வழி மறிக்கின்றான் . அந்த இளைஞனை வெல்ல அவர்களால் முடியவில்லை . அவர்களிடம் இருந்து பிடுங்கிய மக்களின் வரிப்பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்குகிறான் அந்த இளைஞன் .

நீ யார் என்று கேட்ட அந்த மைசூர் சமஸ்தான வீரர்களிடம் “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்ததாக சொல்” என்றார் . அப்போதில் இருந்துதான் தீர்த்தகிரி என்கிற வீர இளைஞன் தீரன் சின்னமலை என புகழ் பெறுகிறார் .

வரிகளை பறிகொடுத்த திவான் அப்படியே விட்டுவிடுவாரா என்ன ? மிகப்பெரிய படைகளை திரட்டி காங்கேயம் நொய்யல் ஆற்றில் சின்னமலையுடன் போரிடுகிறார் . ஆனாலும் தீரன் சின்னமலையின் பக்கமே வெற்றி . இதன்பிறகு மைசூர் சமஸ்தானத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்தார் . அவர் சின்னமலையுடன் நட்புக்கரம் நீட்டுகிறார் .

பிறகு தீரன் சின்னமலையின் பார்வையும் எதிர்ப்பும் ஆங்கிலேயரின்பக்கம் திரும்புகிறது . ஆங்கிலேயர்கள் மிக ஆதிக்கம் பெற்றிருந்த , வலுவாக இருந்த அக்காலத்தில் அவர்களுக்கு தோல்வியை அறிமுகப்படுத்திய ஆகப்பெரும் வீரராக திகழ்ந்தார் .

1802 இல் ஆங்கிலேய குதிரைப்படையுடன் ஓடாநிலையில் மோதியது நம் நாயகனின் படை . அதிலும் தோல்வியை தழுவியது ஆங்கிலேயப்படை . அக்கலக்கட்டத்திலேயே கொரில்லா போர் தந்திர முறைகளை பயன்படுத்தியிருந்தது தீரன் சின்னமலையின் படை .

எத்தனையோ வலிமை மிக்க அரசர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்தபோதும் வலிமையாக எதிர்த்து வெற்றிகளையும் கண்ட மாபெரும் வீரரை வீழ்த்த துரோகம் என்னும் கேவலமான யுக்தியை பின்பற்றியது ஆங்கிலேயப்படை .

பழநி மலைத்தொடரில் கருமலை வனப்பகுதியில் சின்னமலை பதுங்கியிருக்கிறார் . அவருடைய சமையல்காரரான நல்லப்பனை விலைக்கு வாங்குகிறது ஆங்கிலேய படை . பிறகு நல்லப்பனின் வீட்டில் சுரங்கு குழி அமைத்து காத்திருக்கிறது ஆங்கிலேயப்படை . சாப்பிடும் போது நயவஞ்சகமாக கைதுசெய்யப்படுகிறார் தீரன் சின்னமலை .

பிறகு சங்ககிரிக்கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார் .

ஆகச்சிறந்த போர்த்தந்திர முறைகளை கற்றறிந்து ஆங்கிலேய படைகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வெற்றிகளை குவித்த சின்னமலை என்றுமே போற்றத்தகுந்த நாயகனே .

பாமரன்