நன்றாக சம்பாதிக்கும் பலரும் இன்று சேமிக்க திணறுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம், அவர்களுடைய வாங்கி குவிக்கும் பழக்கம் தான். மிகவும் சாதாரணமாக துவங்கும் இந்த பழக்கம் பின்னர் ஒரு “Addiction” ஆக மாறிவிடுகிறது. உண்மையில் வாழ்க்கையை சுமையாக மாற்றுவது நம்முடைய ஆசைகள் தான்.
இதனை உணரும் போது நீங்கள் முன்னேறி செல்கிறீர்கள்.
ஆங்கிலத்தில், குறைவாக வாங்கி நிறைவாக வாழ்வது பற்றிய வாழ்வியலை “Minimalism” என குறிப்பிடுகிறார்கள். அது பற்றித்தான் இங்கே விரிவாக பார்க்க இருக்கிறோம்.
Minimalism என்றால் என்ன?
Minimalism என்பது கஞ்சத்தனமாக இருப்பது அல்ல. தேவையான பொருள்களை வாங்கி அதில் நிம்மதியாக வாழ்வது.
பணத்தின் பார்வையில் மினிமலிசம் என்பதை இவ்வாறு கூறலாம்,
உண்மையாக தேவைப்படும் பொருள்களை வாங்குவது
தேவைக்கும் ஆசைக்கும் இடையேயான வித்தியாசத்தை உணருவது
பணத்தை எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்வது
வீண் செலவுகளை அறவே நிறுத்துவது
பணம் உங்களை கட்டுப்படுத்தாமல் நீங்கள் பணத்தை கட்டுப்படுத்துவது
இவையே மினிமலிசம்.
அதாவது,
குறைவு = தெளிவு
தெளிவு = சேமிப்பு
சேமிப்பு = நிதி சுதந்திரம்
ஏன் minimalism வாழ்க்கைக்கு மிக முக்கியம்?
இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை “வரவு கூட கூட, செலவும் கூடுவது தான்”. அடுத்த ஆண்டில் சம்பளம் கூட வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் போதும் அதற்கு ஒரு பிளான் போட்டுவிடுகிறோம். இங்கு தான் மினிமலிசம் என்ற கருத்தாக்கம் வருகிறது.

நீங்கள் தேவைக்கு அதிகமாக வாங்கும் போது,
அதிக பணத்தை செலவு செய்கிறீர்கள்
சேமிப்பை அதிகரிக்க தவறுகிறீர்கள்
இதனால் உங்களுடைய எதிர்காலத்திற்கான சேமிப்பு குறைகிறது
உங்களுக்கு மனநிம்மதி போகிறது
அதேசமயம் நீங்கள் அளவானவற்றை வாங்கும் போது,
செலவு குறைகிறது
சேமிப்பு அதிகமாகிறது
எதிர்காலம் நம்பிக்கை உரியதாக மாறுகிறது
மனநிம்மதி கிடைக்கிறது
மக்கள் ஏன் தேவையில்லாத பொருள்களை வாங்குகிறார்கள்?
இது மனசு சார்ந்த விசயம். அமேசான், பிளிப்கார்ட்டில் Big Sale போடும் போது என்ன வாங்கலாம் என அங்கேயே போய் தேடுவோம். நமக்கு தேவை இல்லை என்றாலும் கூட, அதிக ஆபர் இருக்கிறது என்பதற்காக வாங்குவோம். இங்கு உண்மையாலுமே நமக்கு தேவை உள்ளதா என்ற கேள்வியை எழுப்ப நாம் மறந்துவிடுகிறோம்.
சிலருக்கு வாங்க வேண்டும் என தோன்றிவிட்டால் உடனே வாங்கிவிட வேண்டும். அதுவரைக்கும் அவர்கள் மன அழுத்தத்துடனேயே இருப்பார்கள்.
அதிக ஆபர்களை பார்த்தால் தேவை உள்ளதா என யோசிக்காமல் வாங்கிவிடுவார்கள்.
பக்கத்து வீட்டில் வைத்திருக்கிறார்கள், நாமும் வாங்க வேண்டும் என வாங்குவார்கள்.
எதிர்காலத்தில் தேவைப்படும் என்ற போலி நம்பிக்கையுடன் வாங்குவார்கள்.
இப்படி பலவிதங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை மக்கள் வாங்கி குவிக்கிறார்கள். துவக்கத்தில் சாதாரணமாக இது ஆரம்பித்தாலும் பின்னர் addiction ஆக இது மாறிவிடுகிறது.
Minimalism ஐ புரிந்துகொள்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
தேவையற்ற பொருள்களை வாங்குவதை தவிர்ப்பதனால் சேமிப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் பல நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காண முடியும். சேமிப்பு கூடும் போது, உங்களுக்கு உண்மையாகவே தேவைப்படும் பொருள்களை EMI இல்லாமல் உங்களால் வாங்க முடியும்.
பலரும் இன்று சிக்கித்தவிக்கும் Credit Card, EMI பிரச்சனைகளில் இருந்து வெளியேறி நிம்மதியான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

உங்களது வங்கிக்கணக்கில் பணம் இருந்தால் எவ்வளவு பெரிய சிக்கலையும் தாண்டிச்செல்லும் மன நிம்மதி உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களது உடல் ஆரோக்கியம் அதிகமாகும்.
தேவையற்ற பொருள்களை வாங்க மிச்சப்படும் பணத்தைக்கொண்டு தேவைப்படும் பொருள்களை தரமானதாக வாங்க முடியும்.
மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை குறைவான பொருள்களைக்கொண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறிவிடும்.
குறைவாக வாங்கி அதிகமாக சேமிப்பது எப்படி?
இது மிகவும் எளிமையான விசயம். நீங்கள் ஒரு பொருளை வாங்க எண்ணியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள்,
இது எனக்கு உண்மையில் தேவையா?
நான் இதை இப்போது வாங்காவிட்டாலும் பிரச்சனையா?
என உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆம் என்றால் வாங்குங்கள். இல்லை என்றால் வாங்காதீர்கள்.
பலரும் எங்கே மாட்டுகிறார்கள் தெரியுமா? நினைத்தவுடன் வாங்குவதில் தான். இதனை நீங்கள் கடந்துசெல்ல 30 நாட்கள் காத்திருப்பு விதியை பின்பற்றுங்கள். ஒரு பொருளை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்த பிறகு உடனே வாங்காமல் 30 நாட்கள் காத்திருங்கள். அப்போதும் அதனை வாங்க வேண்டும், தேவையானது என தோன்றினால் வாங்குங்கள்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களுக்கு செல்லும் வழக்கத்தை கைவிடுங்கள். பொருள்கள் வாங்கும் தேவை இருக்கும் போது மட்டும் அங்கே சென்று வாங்குங்கள். நீங்கள் காரணமில்லாமல் சென்றால் உங்களுக்கு வாங்கும் ஆசையை அது தூண்டிவிடும்.
அனைத்தையும் நானே வைத்துக்கொள்வேன் என நினைக்காதீர்கள். நீங்கள் ஒரு பொருளுக்கு மாற்று வாங்கிய பிறகு பழையதையும் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அதற்கும் நீங்கள் செலவு செய்துகொண்டு இருக்க வேண்டும். பொருள்களின் மீது பற்று கொள்ளாதீர்கள்.
நீங்கள் மட்டும் இதை கடைபிடித்தால் போதாது. உங்களது குடும்பமும் இப்படி பின்பற்றினால் தான் வெற்றிபெற முடியும். ஆகவே, அவர்களுக்கும் மினிமலிசம் பற்றி சொல்லிக்கொடுங்கள்.
உணவு, உடை, பயணம் இவற்றில் சிக்கனமாக இருக்க துவங்குங்கள். இவை தான் உங்களது செலவில் முக்கால்வாசியை விழுங்குகிறது.
வாழ்க்கையில் அனுபவங்களை அதிகமாக்குங்கள். பொருள்களை அல்ல. இந்த கொள்கையை பின்பற்ற துவங்குங்கள்.
முடிவுரை
பணம் தான் எல்லாமுமே ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத்திற்காக சேமிப்பது மிக முக்கியம். அப்போது தான் உங்களால் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு நீங்கள் மினிமலிசம் கொள்கையை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
பணம் உள்ளது என்பதற்காக, அடுத்தவர்களுக்காக, போலியான வாழ்க்கை பிம்பத்திற்காக செலவு செய்வதை உடனே நிறுத்துங்கள். உங்களுக்கு தேவையான பொருள்களோடு உங்களது வாழ்க்கையை அழகாக வாழுங்கள். பணம் இருந்தால் நிம்மதி கூடும்.
