உனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே !

“நாம் இதனை செய்தால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் , அசிங்கமாக நினைப்பார்களோ ? ” இந்த கேள்விதான் இன்று பலரை எதுவுமே செய்யவிடாமல் முடக்கி வைத்துள்ளது . அதனையும் மீறி அவர் செய்ய துவங்கிவிட்டார் என வைத்துக்கொண்டால் அதனை நிறுத்த வேறொன்றும் பெரிதாக செய்ய வேண்டியது இல்லை. நீ செய்வது “சரியில்லை ” “கேவலமாக இருக்கின்றது ” இதுபோன்ற பதில்களை நான்குமுறை சொன்னால் போதும் , அந்த நபர் முயற்சியை கைவிட்டு பழைய நிலைக்கே திரும்பி விடுவார் .

நினைத்துப்பாருங்கள் , சிகப்பு தான் திரைக்கு அழகு என்று இருந்த காலத்தில் கறுப்பு நிறத்தோடு நடிக்க ஒருவர் வருகிறார் என்றால் சிகப்பு கம்பளம் போட்டா வரவேற்று இருப்பார்கள் . அதையும் மீறி ஒருவர் சூப்பர் ஸ்டாராக வந்திருக்கின்றார் என்றால் எப்படி ?. எத்தனைபேர் அவரின் நடிப்பை , நிறத்தை குறை சொல்லி இருப்பார்கள் . அப்போதே இத்தனைபேர் சொல்கிறார்களே நாம் நடிப்பிற்கு லாயக்கற்றவன் தானோ
என நினைத்து இருந்தால் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருக்க முடியுமா ?
அத்தனையையும் மீறி அவரால் வெற்றிபெற முடிந்தது எதனால் ?அவருக்கிருந்த ஆர்வம் ,தொடர் முயற்சி , கடுமையான உழைப்பு , கேவலமான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுவது போன்றவற்றால் தான் நண்பர்களே .
நண்பர்களே! ஒன்றினை உணர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் எதனை செய்தாலும் அதனை பாராட்ட இரண்டு பேரும் , அதில் குறை கண்டறிந்து சொல்ல நான்கு பேரும் இருந்தே தீருவார்கள் . அது இக்காலத்திய இயற்கை .
உடனடியாக அனைவரின் குரலுக்கும் நம்மை மாற்றியமைத்து கொண்டிருந்தால் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது . நன்றாக இருக்கிறதென்று சொன்னால் “தலைக்கனத்தின் உச்சிக்கே சென்றுவிடாமல்” இருக்க பழகிட வேண்டும் . அதேபோல குற்றம் சொல்பவர்களின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும் . கேட்டுக்கொண்டு உடனடியாக நாம் செய்யும் செயலை முற்றிலுமாக நிறுத்திவிட கூடாது .
குற்றம் சொல்பவர்கள் யார் ?
நாம் செய்கிற விசயத்தில் அவர்கள் அனுபவம் உடையவர்களா ?
நமது முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களா?
எனஆராய்ந்து பார்க்க வேண்டும் . அவர்கள் சொன்னதில் அர்த்தம் இருப்பின் அதனை ஏற்று திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து உலகில் அந்த நான்கு நபர்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு உங்களின் முயற்சியை கைவிட்டு விடுதல் கூடாது .
தொடக்கத்தில் அனைத்துமே வெற்றிகரமானதாக அமைந்துவிடுவதில்லை. தொடர்ச்சியான முயற்சி தான் வெற்றிகளை அள்ளித்தரும் . தொடக்கத்தில் உங்களது முயற்சியை கண்டு “சரியில்லை” என சொன்னவர்கள் , அவர்களை மீறி வெற்றியடையும் போது உங்கள் அருகிலே வந்து வெற்றியை கொண்டாடுவார்கள் .
- ஆகவே உங்களின் திறமையை உங்களது தராசில் அளக்க பழகுங்கள் , அதனை விடுத்து அடுத்தவர் தராசில் வைத்து எடை போடாதீர்கள்.
உங்களுக்கு ஓர் உண்மை :
“உள்ளூர் காரரின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் ஊர்க்காரன் பாராட்டுவது என்னவோ பக்கத்து ஊர் ஆட்டக்காரரைத்தான் ” அதைப்போலத்தான் உங்கள் அருகிலே இருக்கும் பெரும்பான்மையானவர்கள் நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டு வந்தாலும் ஏதோ பழனி படிக்கட்டில் ஏறிவிட்டு வந்ததைப்போன்றே பார்ப்பார்கள் அல்லது பார்ப்பதைப்போன்று காட்டிக்கொள்வார்கள்” . இது இயற்கையானதா பொறாமையால் வந்ததா என எண்ணிக்கொண்டிருப்பதைவிட அடுத்து எந்த சிகரத்தில் ஏறலாம் என எண்ணுவதே நல்லது .
வெற்றி உங்களுக்கே !
நன்றி
பாமரன்
