ஞானக்கூத்தன் கவிதைகள்

சொல்

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்

வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு

நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்

மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்

பலரும் சொன்னோம்

‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’

அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.

நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா

ஒருநாள் அவனும் இறந்தான்

கட்டைப் புகையிலை போல அவன்

எரிந்ததைப் பார்த்துத்

திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்

சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.

வழக்கம் போல நான் சொன்னேன்.

‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’

Share with your friends !