ஞானக்கூத்தன் கவிதைகள்

தெரு

எல்லாத் தெருக்களையும் போலவே எனதும்

இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது

பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும்

அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது

தெருவில் அதிக மாற்றமும் இல்லை

இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன

பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது

இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன

தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில்

அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது

எடுப்பிலேயே வீடிருந்ததால்

தெருவை முழுக்க வயதான பிறகு

ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை.

ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே

எல்லாத் தெருக்களும் அடைவதாய் இருக்கும்

எனது தெருக்குள் நுழையும் முன்பு

ஒரு கணம் நிற்பேன். தெருவைப் பார்ப்பேன்

தொலைவில் விளையாடும் எனது பிள்ளைகள்

என்னைக் கண்டதும் ஓடி வராதிருந்தால்

வீட்டின் வாசலில் மனைவி காத்திருக்கா திருந்தால்

வீட்டுக் கெதிரில் அந்நியர் ஒருவரும்

வெறுமனே நின்று கொண்டில்லாமல் இருந்தால்

நடையில் வேகம் கூட்டிச் செல்கிறேன்

பிள்ளைகளை வீட்டுக்கு வருமாறு பணிக்கிறேன்

உள்ளே யுகாந்திரமாகப் பழகிய இருளை

அமைதியாகத் தீண்டிக் கொண்டே

அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறேன்

வெள்ளைப் பல்லியை நகரச் செய்து

விளக்குத் திரியைச் சற்றுப் பெரிதாக்குகிறேன்

முற்றத்துக்கு வந்து நின்று கொண்டு

வாசல் படிக்கப்பால் தெரியும் தெருவை

என்னுடன் மனைவியும் பார்க்கப் பார்க்கிறேன்

சின்னதாய்த் தெரிகிறது தெரு.

Share with your friends !