ஞானக்கூத்தன் கவிதைகள்

பாலை

வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்

உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை

அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி

பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்

காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து

விடியற் பறவைகள் ஒருசில கூவ

வந்தேன் என்றாள் வராது சென்றாள்

யாருடன் சென்றாள் அவரை ஊரார்

பலரும் அறியத் தானறியா மடச்சி

உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்

எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி

நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி

மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்

நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ

கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி

சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்

போகப் போகக் குறையும்

ஆகாச் சிறுவழி அது எது என்றே.

Share with your friends !