ஞானக்கூத்தன் கவிதைகள்

உள்ளோட்டம்

பூமியின் பிச்சைக்கார

முகத்திலே ஒரு வெள்ளோட்டம்

வயல்களில் தண்ணீரோட்டம்

விளையாட்டுப் பிள்ளை ஓட்டம்

புளியன் பூ வைத்தாயிற்று

காவிப்பல் தெரிந்தாற் போல

கிளைகளில் அக்கா பட்சி

கூவின வெட்கத்தோடு

தானொரு முதலை போலப்

புதுப்புனல் ஆற்றில் ஓடும்

ஊர்க்கூட்டம் கரையில் ஓட

போகிறார் தலைக்குடத்தில்

ஆற்றுநீர் துள்ளத் துள்ள

நீர்மொண்ட குருக்கள் வர்ணக்

குடையின்கீழ் ஈரத்தோடு

கச்சேரி ஆசை உள்ள

கோயிலின் மேளக்காரன்

உற்சாகம் ஒன்றில்லாமல்

தொடர்கிறான் ஊதிக்கொண்டு.

Share with your friends !