ஞானக்கூத்தன் கவிதைகள்

காலைநடை

வில்லைத்தகர எழுத்துகளால்

வெட்டுப்பட்ட விளம்பரம் போல்

நிலத்தின் மீது வயல்வரப்பு

விடிந்த நாளின் முதல் சிகரெட்

நெருப்பைத் தவிர மற்றெல்லாம்

பச்சை பொலியும் செழும்பூமி

தோப்புப் பனைகள் தொலைவாக

தாழைப் புதர்கள் உரசாமல்

நடக்கும் அவரைத் தெரிகிறதா?

கையில் கொஞ்சம் நிலமுண்டு

ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல

உமக்கும் இருந்தால் தஞ்சையிலே

நீரும் நடப்பீர் அதுபோல

Share with your friends !