ஞானக்கூத்தன் கவிதைகள்

உதைவாங்கி அழும் குழந்தைக்கு

என்ன கேட்டாய்?

உன் வீட்டில்

என்ன செய்தாய்?

ஏதெடுத்து

என்ன பார்த்தாய்?

எதைக் கிழித்து

வாங்கிக் கொண்டாய்

அடி உதைகள்?

கெட்டுப்போன

பிள்ளைக்கு

வெளியில் கிடைக்கும்

அடி உதைகள்

கெட்டுப் போகாப்

பிள்ளைக்கு

வீட்டில் கிடைக்கும்

முன்கூட்டி

அவர்கள் அவர்கள்

பங்குக்கு

உதைகள் வாங்கும்

காலத்தில்

உனக்கு மட்டும்

கிடைத்தாற் போல்

சின்னக் கண்ணா

அலட்டாதே.

Share with your friends !