ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒட்டகம்

ஆயிரம் முறைகள் எண்ணிப்

பார்த்தபின் முடிவு கண்டேன்

ஒட்டகம் குரூபி இல்லை

குரூபிதான் என்றால் மோவாய்

மடிப்புகள் மூன்று கொண்ட

அத்தையும் குரூபி தானே?

அத்தையைக் குரூபி என்றோ

ஒருவரும் சொல்வதில்லை

சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது

மற்றவர் அழகில் குற்றம்

பார்ப்பது உலகநீதி

ஒட்டகம் குரூபி என்றால்

அதனுடன் உலகுக் கேதும்

நிரந்தரச் சண்டை உண்டோ?

Share with your friends !