ஞானக்கூத்தன் கவிதைகள்

யெதிரெதிர் உலகங்கள்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில்

திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று

ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு

தன்னாளைத் திருப்பியதும் விஸ்வா மித்ரன்

கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத்

தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான்

கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம்

ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று

முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார்.

சினம்தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக்

கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும்

இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான்

அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர

மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து

வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு:

மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை

குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை

கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்

Share with your friends !