ஞானக்கூத்தன் கவிதைகள்

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

‘மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்

பார்த்திருக்க மாட்டீர்கள்

மன்னார்சாமி

ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்

ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்

ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்

குறைவில்லை

இது கபாலம்

மார்புக்கூடு…

போணிசெய்த பெருங்கைகள்…

கைகால் மூட்டு

பூரான்போல் முதுகெலும்பு… சிரிக்கும் பற்கள்…

சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்

புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’

மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க

ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி

அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு

Share with your friends !