ஞானக்கூத்தன் கவிதைகள்

வெங்காயம்

வியர்த்திட குருதி ஓட்டம்

நேர்பட வெங்காயம் போல்

ஏற்றது உலகில் இல்லை

வெண்கலக் காலத்தோரும்

விரும்பினார். கல்லுக்கொன்றாய்த்

தின்றதால் எகிப்தியர்க்குப்

பிரமிடுகள் கைகூடிற்றாம்

தன்மடி வெங்காயத்தை

மற்றொரு சிற்பிக்காக

வீசிடும் சிற்பி பந்தைப்

பிடிப்பது போல் பிடிக்கும்

அங்கொரு சிற்பி என்று…

தஞ்சையிற் பெரிய கோயில்

கட்டினோர் எகிப்தியர்போல்

தாங்களும் வெங்காயங்கள்

தின்றவராக வேண்டும்.

மத்திய ஆசியாவில்

முதன் முதல் பிறந்து பின்பு

பலபல விண்ணும் மண்ணும்

பார்த்ததாம் இவ்வெங்காயம்.

பலபல விண்ணும் மண்ணும்

பார்த்தபின் எதனால் இன்றும்

குடுமியை வெங்காயங்கள்

கைவிட மாட்டேன் என்னும்.

Share with your friends !