ஞானக்கூத்தன் கவிதைகள்

தணல்

தெரியுமா மாமி இந்தப்

பிராமணன் கதையை? வெட்கக்

கேடுதான் சொன்னால் போங்கள்

இத்தனை வருஷமாக

இருக்கலை அநியாயங்கள்

மனசொரு சமயம் வேகும்.

அமைதியாய் இருந்தேன் தானே

ஒருவழி வருவாரென்று

ராகுவின் பார்வை பட்டால்

பீஷ்மனும் தாசி கேட்பான்.

ஜாதகம் பார்த்தேன் நாலு

மந்திரம் செய்தேன் ஆனால்

யாதொரு பலனும் இல்லை.

தலைக்குமேல் போவதற்குள்

தடுக்கலை யென்றால் மானம்

என்னதும் சேர்ந்து போகும்.

காதிலே விழுந்ததெல்லாம்

புரளியாம். எனக்கு மட்டும்

நிஜமெனத் தெரியும் மாமி.

‘நேற்றுநான் உங்களோடு

நின்றதை வைதார் மாமி

ஊர்க்கதை பேசினேனாம்’.

‘நாலைந்து மாசமாச்சு

வெளியிலே தலையைக்காட்டி’

நரைதிரை வயதிற்பிள்ளை

யாள்வது அவமானம்தான்.

என்னவோ மாமி தெய்வம்

நினைப்பதே நடக்குமென்றும்.’

Share with your friends !