ஞானக்கூத்தன் கவிதைகள்

சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு

மருத்துவ மனையில் படுத்திருந்தான்

தலையில் கட்டுடன்.

நர்ஸ் வந்தாள்;

ஊசி போட்டாள். நான்கைந்து

மாத்திரைகள் தந்தாள். போனாள்

வழக்கம் போல அன்றும்

அந்தக் கதவை அவன் பார்த்தான்.

அடுத்த நிமிஷம் அந்தக் கதவு

விழுந்தே விட்டது அவன் மேல்.

அந்தத் தெருவில் அவ்வீட்டைக்

கடந்து சென்ற ஒவ்வொரு நாளும்

அவன் அதைப் பார்த்தான்.

மேலே இரண்டு

கீழே இரண்டென்று

நான்கு கதவுகள் கொண்ட

மாடிப் பக்கத்து ஜன்னல்

பச்சை வண்ணம் பூசப்பட்ட

சதுர ஜன்னல்.

ஜன்னல்களில் ஒன்று

கழன்று விழப் போவது போல

அபாயகர மாகத் தொங்கியது

என்றாவது ஒருநாள்

எங்கேனும் சற்று

உட்கார்ந்து போகும் பழக்கமுள்ள

பறவை ஒன்றின்கால் பட்டால் போதும்

ஜன்னல் கதவு தெருவில்

நடப்பவர் மேல் விழுந்துவிடும்

அந்தக் கதவு அவன் மேல்

விழுந்தே விட்டது.

அத்தனைக் காலம் காத்திருந்து

தன் தலை மேல் அந்தக் கதவு

விழுவானேன் எனஅறு யோசித்தான்

அப்போது அசரீரி சொல்லிற்று:

‘அந்தக் கதவைப் பார்க்கும் போதெல்லாம்

விழும் விழும் என்று நீதான்

எதிர்பார்த்தாய். பலித்தே விட்டது, போ.’

Share with your friends !