ஞானக்கூத்தன் கவிதைகள்

திருப்தி

சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே

முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான்.

இரண்டு வரிகளில் ஒருகவிதை.

அதற்குக் கீழே இருந்த பெயரைப்

படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது.

கவிதை

எல்லோரும் நல்லவரே

அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால்

இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு

எழுதிப் போடணும் ஆனால்

ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால்

நன்றாய் இருக்காது. தெரிந்து விடும்

எனவே எழுதினான்.

சென்ற இதழில் கொய்ராலா

படத்தைப் போட்டு அசத்திவிட்டீர்

வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன்.

இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி

பற்றிய கட்டுரை மொழிக்குப் புதிது.

கதைகளில் மாவு தோசை படித்ததும்

நாக்கில் எச்சில் ஊறிற்று

நல்ல கவிதைகள் கிடைக்கவில்லையா?

Share with your friends !