ஞானக்கூத்தன் கவிதைகள்

ஐந்து கவிதைகள்

1

என் வீட்டுச் சுவரில் எவரோ எழுதிய

இரட்டை இலைமேல் கம்பளி பூச்சி

2

அரசியல் வாதிதான் பாரத ரத்னம்

மற்றவரெல்லாம் டீக்கடை ரத்னம்

3

நிறைய பலாப்பழம் போகிற தென்றான்

சிறுவன் ஒருவன். திரும்பிப் பார்த்தேன்

போய்க் கொண்டிருந்தது கூச்சலிடாத

மோடா வியாபரி

4

தட்டான் பூச்சிகள்

தோட்டத்தில் சுற்றக் கண்டு

கிட்டாத இன்பம்

கிட்டிய தென்ன – கண்ணபெருமானே.

5

பச்சைத் தழையுடன் நின்றிருந்த

மரத்தில் காற்று புகுந்தது.

எண்ணி எண்ணி துறக்கிறாற் போல

விளையாடி விழுந்தன பழுப்பிலைகள்.

விழுந்த இலைகளில் இன்னமும் பசுமை

குன்றாதவை இருந்தது கண்டேன். அவ்விலைகள்

மரத்தில் மேலும் சில நாள் இருந்திருக்கலாம் என

நினைத்தேன். விழுந்தன அவ்வகை இலைகள்

ஆனால் நான்யார் அதைக்கூற?

மரமே அறியும் இலைகளில் எவ்வெவ்

இலைகளை உதிர்க்கலாம் அன்றைக் கென்று.

Share with your friends !