பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

8. பாரத மாதா

தான தனந்தன தான தனந்தன

தானனத்‌ தானா னே.

முன்னை இலங்கை அரக்கர்‌ அழிய

முடித்தவில்‌ யாருடை வில்‌?- எங்கள்‌

அன்னை பயங்கரி பாரத தேவிநல்‌

ஆரிய ராணியின்‌ வில்‌. (1)

இந்திர சித்தன்‌ இரண்டு துண்டாக

எடுத்தவில்‌ யாருடை வில்‌? – எங்கள்‌

மந்திரத்‌ தெய்வம்‌ பாரத ராணி

வயிரவி தன்னுடை வில்‌. (2)

“ஒன்று பரம்பொருள்‌ நாம்‌ அதன்‌ மக்கள்‌

உலகின்பக்‌ கேணி”: என்றே -மிக

நன்று பல்வேதம்‌ வரைந்தகை பாரத

நாயகி தன்திருக்‌ கை. (9)

சித்த மயமிவ்‌ உலகம்‌ உறுதிநம்‌

சித்தத்தில்‌ ஓங்கி விட்டால்‌ -துன்பம்‌

அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்‌

ஆரிய ராணியின்‌ சொல்‌. (4)

சகுந்தலை பெற்றதோர்‌ பிள்ளைசிங்‌ கத்தினைத்‌

தட்டி விளை யாடி – நன்று

உகந்ததோர்‌ பிள்ளைமுன்‌ பாரத ராணி

ஒளியுறப்‌ பெற்ற பிள்ளை. (5)

காண்டிவம்‌ ஏந்தி உலகினை வென்றது

கல்லொத்த தோள்‌எவர்‌ தோள்‌?- எம்மை

ஆண்டருள்‌ செய்பவள்‌ பெற்று வளர்ப்பவள்‌

ஆரிய தேவியின்‌ தோள்‌. (6)

சாகும்‌ பொழுதில்‌ இருசெவிக்‌ குண்டலம்‌

தந்த தெவர்‌ கொடகைகை? -சுவைப்‌

பாகு மொழியிற்‌ புலவர்கள்‌ போற்றிடும்‌

பாரத ராணியின்‌ கை. (2)

போர்க்களத்‌ தேபர ஞானமெய்க்‌ கீதை

புகன்ற தெவருடை வாய்‌?- பகை

தீர்க்கத்‌ திறந்தரு பேரினள்‌ பாரத

தேவி மலர்த்திரு வாய்‌. (6)

தந்தை இனிதுறத்‌ தான்‌ அர சாட்சியும்‌

தையலர்‌ தம்முறவும்‌ – இனி

இந்த உலகில்‌ விரும்புகி லேன்‌என்றது

எம்‌அனை செய்த உள்ளம்‌. (9)

அன்பு சிவம்‌உல கத்துயர்‌ யாவையும்‌

அன்பினிற்‌ போகும்‌ என்றே – இங்கு

முன்பு மொழிந்துல காண்டதோர்‌ புத்தன்‌

மொழிஎங்கள்‌ அன்னை மொழி. (10)

மிதிலை எரிந்திட வேதப்‌ பொருளை

வினவும்‌ சனகன்‌ மதி – தன்‌

மதியினிற்‌ கொண்டதை நின்று முடிப்பது

வல்லநம்‌ அன்னை மதி. (11)

தெய்விகச்‌ சாகுந்‌ தலமெனும்‌ நாடகம்‌

செய்த தெவர்‌ கவிதை? – அயன்‌

செய்வ தனைத்தின்‌ குறிப்புணர்‌ பாரத

தேவி அருட்‌ கவிதை. (12)

(1922-ல்‌ சுதேச கீதங்கள்‌ பாகம்‌ 2)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *