பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

17. பாரத சமுதாயம்‌

ராகம்‌ – பியாக்‌ தாளம்‌ – திஸ்ர ஏகதாளம்‌

பல்லவி

பாரத சமுதாயம்‌ வாழ்கவே! – வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம்‌ வாழ்கவே! – ஜய ஜய ஜய! (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின்‌ சங்கம்‌

முழுமைக்கும்‌ பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்‌

உலகத்‌ துக்கொரு புதுமை – வாழ்க! (பாரத)

சரணங்கள்‌

மனித ௬ணவை மனிதர்‌ பறிக்கும்‌

வழக்கம்‌ இனியுண்டோ?

மனிதர்‌ நோக மனிதர்‌ பார்க்கும்‌

வாழ்க்கை இனியுண்டோ? – புலனில்‌

வாழ்க்கை இனியுண்டோ?- நம்மி லந்த

வாழ்க்கை இனியுண்டோ?

இனிய பொழில்கள்‌ நெடிய வயல்கள்‌

எண்ணரும்‌ பெருநாடு,

கனியும்‌ கிழங்கும்‌ தானி யங்களும்‌

கணக்கின்றித்‌ தரு நாடு – இது

கணக்கின்றித்‌ தரு நாடு நித்த – நித்தம்‌

கணக்கின்றித்‌ தரு நாடு – வாழ்க! (பாரத)

இனியொரு விதிசெய்‌ வோம்‌ – அதை

எந்த நாளும்‌ காப்போம்‌,

தனியொருவனுக்‌ குணவிலை யெனில்‌

ஜகத்தினை அழித்திடு வோம்‌ – வாழ்க! (பாரத)

எல்லா உயிர்களிலும்‌ நானே இருக்கிறேன்‌

என்றுரைத்தான்‌ கண்ண பெருமான்‌,

எல்லாரும்‌ அமரநிலை எய்தும்நன்‌ முறையை

இந்தியா உலகிற்‌ களிக்கும்‌ – ஆம்‌

இந்தியா உலகிற்‌ களிக்கும்‌ -ஆம்‌, ஆம்‌

இந்தியா உலகிற்‌ களிக்கும்‌ – வாழ்க! (பாரத)

எல்லாரும்‌ ஓர்குலம்‌ எல்லாரும்‌ ஓரினம்‌

எல்லாரும்‌ இந்திய மக்கள்‌,

எல்லாரும்‌ ஓர்நிறை எல்லோரும்‌ ஓர்விலை

எல்லாரும்‌ இந்நாட்டு மன்னர்‌ – நாம்‌

எல்லாரும்‌ இந்நாட்டு மன்னர்‌ – ஆம்‌

எல்லாரும்‌ இந்நாட்டு மன்னர்‌ – வாழ்க! (பாரத)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *