பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

16. போகின்ற பாரதமும்‌ வருகின்ற பாரதமும்‌

(போகின்ற பாரதத்தைச்‌ சபித்தல்‌)

வலிமை யற்ற தோளினாய்‌ போபோபோ

மார்பி லேஒ டுங்கினாய்‌ போபோபோ

பொலிவி லாமு கத்தினாய்‌ போபோபோ

பொறி யிழந்த விழியினாய்‌ போபோபோ

ஒலியி ழந்த குரலினாய்‌ போபோபோ

ஒளியி ழந்த மேனியாய்‌ போபோபோ

கிலிபி டித்த நெஞ்சினாய்‌ போபோபோ

கீழ்மை யென்றும்‌ வேண்டுவாய்‌ போபோபோ

இன்று பார தத்திடை நாய்போலே

ஏற்ற மின்றி வாழுவாய்‌ போபோபோ

நன்று கூறில்‌ அஞ்சுவாய்‌ போபோபோ

நாணி லாது கெஞ்சுவாய்‌ போபோபோ

சென்று போன பொய்யெலாம்‌ மெய்யாகச்‌

சிந்தை கொண்டு போற்றுவாய்‌ போபோபோ

வென்று நிற்கும்‌ மெய்யெலாம்‌ பொய்யாக

விழிம யங்கி நோக்குவாய்‌ போபோபோ

வேறு வேறு பாஷைகள்‌ கற்பாய்‌ நீ

வீட்டு வார்த்தை கற்கிலாய்‌ போபோபோ

நூறு நூல்கள்‌ போற்றுவாய்‌ மெய்கூறும்‌

நூலி லொத்தி யல்கிலாய்‌ போபோபோ

மாறு பட்ட வாதமே ஐந்நூறு

வாயில்‌ நீள ஓதுவாய்‌ போபோபோ

சேறு பட்ட நாற்றமும்‌ தூறுஞ்சேர்‌

சிறிய வீடு கட்டுவாய்‌ போபோபோ

ஜாதி நூறு சொல்லுவாய்‌ போபோபோ

தரும மொன்றி யற்றிலாய்‌ போபோபோ

நீதி நூறு சொல்லுவாய்‌ காசொன்று

நீட்டினால்‌ வணங்குவாய்‌ போபோபோ

தீது செய்வ தஞ்சிலாய்‌ நின்முன்னே

தீமை நிற்கி லோடுவாய்‌ போபோபோ

சோதி மிக்க மணியிலே காலத்தால்‌

சூழ்ந்த மாசு போன்றனை போபோபோ.

(வருகின்ற பாரதத்தை வாழ்த்துதல்‌)

ஒளிப டைத்த கண்ணினாய்‌ வாவாவா

உறுதி கொண்ட நெஞ்சினாய்‌ வாவாவா

களிப டைத்த மொழியினாய்‌ வாவாவா

கடுமை கொண்ட தோளினாய்‌ வாவாவா

தெளிவு பெற்ற மதியினாய்‌ வாவாவா

சிறுமை கண்டு பொங்குவாய்‌ வாவாவா

எளிமை கண்டு இரங்குவாய்‌ வாவாவா

ஏறு போல்ந டையினாய்‌ வாவாவா

மெய்மை கொண்ட நூலையே அன்போடு

வேதமென்று போற்றுவாய்‌ வாவாவா

பொய்மை கூற லஞ்சுவாய்‌ வாவாவா

பொய்மை நூல்க ளெற்றுவாய்‌ வாவாவா

நொய்மை யற்ற சிந்தையாய்‌ வாவாவா

நோய்க ளற்ற உடலினாய்‌ வாவாவா

தெய்வ சாபம்‌ நீங்கவே நங்கள்‌ சீர்த்‌

தேசமீது தோன்றுவாய்‌ வாவாவா

இளைய பார தத்தினாய்‌ வாவாவா

எதிரிலா வலத்தினாய்‌ வாவாவா

ஒளி யிழந்த நாட்டிலே நின்றேறும்‌

உதய ஞாயி றொப்பவே வாவாவா

களையி ழந்த நாட்டிலே முன்போலே

கலைசி றக்க வந்தனை வாவாவா

விளையு மாண்பு யாவையும்‌ பார்த்தன்போல்‌

விழியி னால்வி ளக்குவாய்‌ வாவாவா

வெற்றி கொண்ட கையினாய்‌ வாவாவா

விநயம்‌ நின்ற நாவினாய்‌ வாவாவா

முற்றி நின்ற வடிவினாய்‌ வாவாவா

முழுமை சேர்மு கத்தினாய்‌ வாவாவா

கற்ற லொன்று பொய்க்கிலாய்‌ வாவாவா

கருதிய தியற்‌ றுவாய்‌ வாவாவா

ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல்லாம்‌

ஒருபெ ருஞ்செயல்‌ செய்வாய்‌ வாவாவா (8)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *