பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

15. துடிக்கின்ற நெஞ்சம்‌ (பாரத ஜனங்களின்‌ தற்கால நிலை)

நொண்டிச்‌ சிந்து

நெஞ்சு பொறுக்கு திலையே!- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்‌,

அஞ்சி யஞ்சிச்‌ சாவார்‌ – இவர்‌

அஞ்சாத பொருளில்லை அவனியிலே,

வஞ்சனைப்‌ பேய்கள்‌ என்பார்‌ – இந்த

மரத்தில்‌ என்பார்‌; அந்தக்‌ குளத்தில்‌ என்பார்‌

துஞ்சுது முகட்டில்‌ என்பார்‌ – மிகத்‌

துயர்ப்படுவார்‌ எண்ணிப்‌ பயப்படுவார்‌. (நெஞ்சு)

மந்திர வாதி என்பார்‌ – சொன்ன

மாத்திரத்தி லேமனக்‌ கிலிபிடிப்பார்‌,

யந்திர சூனி யங்கள்‌ – இன்னும்‌

எத்தனை ஆயிரம்‌ இவர்துயர்கள்‌!

தந்த பொருளைக்‌ கொண்டே – ஜனம்‌

தாங்குவர்‌ உலகத்தில்‌ அரசரெல்லாம்‌,

அந்த அரசியலை- இவர்‌

அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம்‌ – அயர்வார்‌. (நெஞ்சு)

சிப்பாயைக்‌ கண்டு அஞ்சுவார்‌ – ஊர்ச்‌

சேவகன்‌ வருதல்கண்டு மனம்பதைப்பார்‌,

துப்பாக்கி கொண்டு ஒருவன்‌ – வெகு

தூரத்தில்‌ வரக்கண்டு வீட்டிலொளிவார்‌,

அப்பால்‌ எவனோ செல்வான்‌ – அவன்‌

ஆடையைக்‌ கண்டுபயந்‌ தெழுந்துநிற்பார்‌,

எப்போதும்‌ கைகட்டுவார்‌ – இவர்‌

யாரிடத்தும்‌ பூனைகள்போல்‌ ஏங்கிநடப்பார்‌. (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த

நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்‌,

கொஞ்சமோ பிரிவினைகள்‌? – ஒரு

கோடிஎன்‌ றால்‌அது பெரிதாமோ?

ஐந்துதலைப்‌ பாம்பென்‌ பான்‌ – அப்பன்‌

ஆறுதலை யென்றுமகன்‌ சொல்லி விட்டால்‌

நெஞ்சு பிரிந்திடு வார்‌ – பின்பு

நெடுநாள்‌ இருவரும்‌ பகைத்திருப்பார்‌. (நெஞ்சு)

சாத்திரங்கள்‌ ஒன்றும்‌ காணார்‌ – பொய்ச்‌

சாத்திரப்‌ பேய்கள்சொல்லும்‌ வார்த்தைநம்பியே

கோத்திரம்‌ ஒன்றா யிருந்தாலும்‌ – ஒரு

கொள்கையிற்‌ பிரிந்தவனைக்‌ குலைத்திகழ்வார்‌,

தோத்திரங்கள்‌ சொல்லி அவர்தாம்‌ – தமைச்‌

சூதுசெய்யும்‌ நீசர்களைப்‌ பணிந்திடுவார்‌,

ஆத்திரங்‌ கொண்டே இவன்சைவன்‌ – இவன்‌

அரிபக்தன்‌ என்றுபெருஞ்‌ சண்டையிடுவார்‌. (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே – இதை

நினைந்து நினைந்திடினும்‌ வெறுக்குதிலையே,

கஞ்சி குடிப்பதற்‌ கிலார்‌ – அதன்‌

காரணங்கள்‌ இவையென்னும்‌ அறிவுமிலார்‌

பஞ்சமோ பஞ்சம்‌ என்றே – நிதம்‌

பரிதவித்தே உயிர்‌ துடிதுடித்துத்‌

துஞ்சி மடிகின்‌ றாரே – இவர்‌

துயர்களைத்‌ தீர்க்கவோர்‌ வழியிலையே. (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார்‌ – இவர்‌

எழுந்து நடப்பதற்கும்‌ வலிமையிலார்‌

கண்ணிலாக்‌ குழந்தை கள்போல்‌ – பிறர்‌

காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்‌,

நண்ணிய பெருங்கலைகள்‌ – பத்து

நாலாயிரங்‌ கோடி நயந்துநின்ற

புண்ணிய நாட்டினிலே – இவர்‌

பொறியற்ற விலங்குகள்‌ போலவாழ்வார்‌. (நெஞ்சு) (நெஞ்சு)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *