பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

14. தாயின்‌ மணிக்கொடி (மாதாவின்‌ துவஜம்‌)

பாரத நாட்டுக்‌ கொடியினைப்‌ புகழ்தல்‌

(தாயுமானவர்‌ ஆனந்தக்களிப்பு மெட்டு)

பல்லவி

தாயின்‌ மணிக்கொடி பாரீர்‌! – அதைத்‌

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்‌!

சரணங்கள்‌

ஓங்கி வளர்ந்ததோர்‌ கம்பம்‌ – அதன்‌

உச்சியின்‌ மேல்வந்தே மாதரம்‌ என்றே

பாங்கின்‌ எழுதித்‌ திகழும்‌ – செய்ய

பட்டொளி வீசிப்‌ பறந்தது பாரீர்‌! (தாயின்‌)

பட்டுத்‌ துகிலென லாமோ? – அதிற்‌

பாய்ந்து சுழற்றும்‌ பெரும்புயற்‌ காற்று

மட்டு மிகுந்தடித்‌ தாலும்‌ – அதை

மதியாதவ்‌ வுறுதிகொள்்‌ மாணிக்கப்‌ படலம்‌ (தாயின்‌)

இந்திரன்‌ வச்சிரம்‌ ஓர்பால்‌ – அதில்‌

எங்கள்‌ துருக்கர்‌ இளம்பிறை ஓர்பால்‌ தாய்‌

மந்திரம்‌ நடுவுறத்‌ தோன்றும்‌ – அதன்‌

மாண்பை வகுத்திட வல்லவன்‌ யானோ? (தாயின்‌)

கம்பத்தின்‌ கீழ்நிற்றல்‌ காணீர்‌ – எங்கும்‌

காணரும்‌ வீரர்‌ பெருந்திருக்‌ கூட்டம்‌

நம்பற்‌ குரியர்‌ அவ்வீரர்‌; – தங்கள்‌

நல்லுயிர்‌ ஈந்தும்‌ கொடியினைக்‌ காப்பார்‌. (தாயின்‌)

அணியணி யாயவர்‌ நிற்கும்‌ – இந்த

ஆரியக்‌ காட்சியோர்‌ ஆனந்தம்‌ அன்றோ?

பணிகள்‌ பொருந்திய மார்பும்‌ -விறல்‌

பைந்திரு வோங்கும்‌ வடிவமும்‌ காணீர்‌! (தாயின்‌)

செந்தமிழ்‌ நாட்டுப்‌ பொருநர்‌ – கொடுந்‌

தீக்கண்‌ மறவர்கள்‌ சேரன்றன்‌ வீரர்‌

சிந்தை துணிந்த தெலுகர்‌ – தாயின்‌

சேவடிக்‌ கேபணி செய்திடு துளுவர்‌. (தாயின்‌)

கன்னடர்‌ ஒட்டிய ரோடு – போரில்‌

காலனும்‌ அஞ்சக்‌ கலக்கும்‌ மராட்டர்‌,

பொன்னகர்த்‌ தேவர்க ளொப்ப -நிற்கும்‌

பொற்புடையார்‌ இந்துஸ்‌ தானத்து மல்லர்‌. (தாயின்‌)

பூதலம்‌ முற்றிடும்‌ வரையும்‌ -அறப்‌

போர்விறல்‌ யாவும்‌ மறப்புறும்‌ வரையும்‌

மாதர்கள்‌ கற்புள்ள வரையும்‌ – பாரில்‌

மறைவரும்‌ கீர்த்திகொள்‌ ரஜபுத்ர வீரர்‌. (தாயின்‌)

பஞ்ச நதத்துப்‌ பிறந்தோர்‌ – முன்னைப்‌

பார்த்தன்‌ முதற்பலர்‌ வாழ்ந்தநன்‌ னாட்டார்‌.

துஞ்சும்‌ பொழுதினும்‌ தாயின்‌ – பதத்‌

தொண்டு நினைந்திடும்‌ வங்கத்தி னோரும்‌. (தாயின்‌)

சேர்ந்ததைக்‌ காப்பது காணீர்‌!- அவர்‌

சிந்தையின்‌ வீரம்‌ நிரந்தரம்‌ வாழ்க!

தேர்ந்தவர்‌ போற்றும்‌ பரத – நிலத்‌

தேவி துவஜம்‌ சிறப்புற வாழ்க! (தாயின்‌)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *