பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

13. பாரத தேவியின்‌ திருத்தசாங்கம்‌

நேரிசை வெண்பா

நாமம்‌ (காம்போதி)

பச்சை மணிக்கிளியே! பாவியெனக்‌ கேயோகப்‌

பிச்சை யருளியதாய்‌ பேருரையாய்‌! – இச்சகத்தில்‌

பூரணமா ஞானப்‌ புகழ்விளக்கை நாட்டுவித்த

பாரதமா தேவியெனப்‌ பாடு. (1)

நாடு (வசந்தா)

தேனார்‌ மொழிக்கிள்ளாய்‌! தேவியெனக்‌ கானந்த

மானாள்பொன்‌ னாட்டை அறிவிப்பாய்‌!- வானாடு

பேரிமய வெற்புமுதல்‌ பெண்குமரி ஈறாகும்‌

ஆரியநா டென்றே அறி. (2)

நகர்‌ (மணியரங்கு)

இன்மழலைப்‌ பைங்கிளியே! எங்கள்‌ உயிரானாள்‌

நன்மையுற வாழும்‌ நகரெதுகொல்‌? – சின்மயமே

நானென்‌ றறிந்த நனிபெரியோர்க்‌ கின்னமுது

தானென்ற காசித்‌ தலம்‌. (3)

ஆறு (சுருட்டி)

வண்ணக்கிளி! வந்தே மாதரமென்‌ றோதுவரை

இன்னலறக்‌ காப்பா ளியாறுரையாய்‌! – நன்னர்செயத்‌

தான்போம்‌ வழியெலாம்‌ தன்மமொடு பொன்விளைக்கும்‌

வான்போந்த கங்கையென வாழ்த்து. (4)

மலை (கானடா)

சோலைப்‌ பசுங்கிளியே! தொன்மறைகள்‌ நான்குடையாள்‌

வாலை வளரும்‌ மலைகூறாய்‌!- ஞாலத்துள்‌

வெற்பொன்றும்‌ ஈடிலதாய்‌ விண்ணில்‌ முடிதாக்கும்‌

பொற்பொன்று வெள்ளைப்‌ பொருப்பு. (5)

ஊர்தி (தன்யாசி)

சீரும்‌ சிறப்புமுயர்‌ செல்வமுமோ ரெண்ணற்றாள்‌

ஊரும்‌ புரவி உரைதத்தாய்‌! – தேரின்‌

பரிமிசையூர்‌ வாளல்லள்‌ பாரனைத்தும்‌ அஞ்சும்‌

அரிமிசையே ஊர்வாள்‌ அவள்‌. (6)

படை (முகாரி)

கருணை யுருவானாள்‌ காய்ந்தெழுங்காற்‌ கிள்ளாய்‌

செருநரைவீழ்த்‌ தும்படையென்‌ செப்பாய்‌! – பொருபவர்மேல்‌

தண்ணளியால்‌ வீழாது, வீழின்‌ தகைப்பரிதாம்‌

திண்ணமுறு வான்குலிசம்‌ தேறு. (2)

முரசு (செஞ்சுருட்டி)

ஆசை மரகதமே! அன்னைதிரு முன்றிலிடை

ஓசை வளர்முரசம்‌ ஓதுவாய்‌! – “பேசுகவோ

சத்தியமே, செய்க தருமமே” என்றொலிசெய்‌

முத்திதரும்‌ வேத முரசு. (8)

தார்‌ (பிலஹரி)

வாராய்‌ இளஞ்சுகமே! வந்திப்பார்க்‌ கென்றுமிடர்‌

தாராள்‌ புனையுமணித்‌ தார்கூறாய்‌!- சேராரை

முற்றாக்‌ குறுநகையால்‌ முற்றுவித்துத்‌ தானொளிர்வாள்‌

பொற்றா மரைத்தார்‌ புனைந்து. (9)

கொடி (கேதாரம்‌)

கொடிப்பவள வாய்க்கிள்ளாய்‌! சூத்திரமும்‌ தீங்கும்‌

மடிப்பவளின்‌ வெல்கொடிதான்‌ மற்றென்‌? – அடிப்பணிவார்‌

நன்றாரத்‌ தீயார்‌ நலிவுறவே வீசுமொளி

குன்றா வயிரக்‌ கொடி. (10)

(10.10.1908, புதுவை “இந்தியா” இதழ்‌)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *