பாரதியார் கவிதைகள் – பாரத நாடு

12. பாரத மாதா நவரத்தின மாலை

(இப்பாடல்களில்‌ முறையே ஒன்பது இரத்தினங்களின்‌ பெயர்கள்‌

இயற்கைப்‌ பொருளிலேனும்‌ சிலேடைப்‌ பொருளிலேனும்‌

வழங்கப்பட்டு இருக்கின்றன.)

காப்பு

வீரர்முப்‌ பத்திரண்டு கோடி விளைவித்த

பாரதமா தாவின்‌ பதமலர்க்கே – சீரார்‌

நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக்‌ காப்பாம்‌

சிவரத்தன மைந்தன்‌ திறம்‌.

வெண்பா

திறமிக்க நல்வயிரச்‌ சீர்திகழும்‌ மேனி

அறமிக்க சிந்தை அறிவு – பிறநலங்கள்‌

எண்ணற்‌ றனபெறுவார்‌ “இந்தியர்‌” என்ற நின்றன்‌

கண்ணொத்த பேருரைத்தக்‌ கால்‌.

கட்டளைக்‌ கலித்துறை

காலன்‌ எதிர்ப்படிற்‌ கைகூப்பிக்‌

கும்பிட்டுக்‌ கம்பனமுற்‌

றோலமிட்‌ டோடி மறைந்தொழி

வான்‌; பகை யொன்றுளதோ?

நீலக்‌ கடலொத்த கோலத்தி

ளாள்மூன்று நேத்திரத்தாள்‌

காலக்‌ கடலுக்கோர்‌ பாலமிட்‌

டாள்‌அன்னை காற்படினே.

எண்சீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்‌

அன்னையே அந்நாளில்‌ அவனிக்‌ கெல்லாம்‌

ஆணிமுத்துப்‌ போன்றமணி மொழிக ளாலே

பன்னிநீ வேதங்கள்‌, உபநிட தங்கள்‌

பரவுபுகழ்ப்‌ புராணங்கள்‌, இதிகா சங்கள்‌;

இன்னும்பல்‌ நூல்களிலே இசைத்த ஞானம்‌

என்னென்று புகழ்ந்துரைப்போம்‌ அதனை இந்நாள்‌?

மின்னுகின்ற பேரொளிகாண்‌! காலங்‌ கொன்ற

விருந்துகாண்‌! கடவுளுக்கோர்‌ வெற்றி காணே.

ஆசிரியப்‌ பா

வெற்றி கூறுமின்‌! வெண்சங்‌ கூதுமின்‌!

கற்றவ ராலே உலகுகாப்‌ புற்றது

உற்றதிங்‌ கிந்நாள்‌! உலகினுக்‌ கெல்லாம்‌

இற்றைநாள்‌ வரையினும்‌ அறமிலா மறவர்‌,

குற்றமே தமது மகுடமாக்‌ கொண்டோர்‌,

மற்றை மனிதரை அடிமைப்‌ படுத்தலே

முற்றிய அறிவின்‌ முறையென்று எண்ணுவார்‌;

பற்றை அரசர்‌ பழிபடு படையுடன்‌

சொற்றை நீதி தொகுத்துவைத்‌ திருந்தார்‌

இற்றைநாள்‌;

பாரி லுள்ள பலநாட்‌ டினர்க்கும்‌

பாரத நாடு புதுநெறி பழக்கல்‌

உற்றதிங்‌ கிந்நாள்‌; உலகெலாம்‌ புகழ

இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்‌

கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்‌

சொற்றது கேளீர்‌! : “புவிமிசை யின்று

மனிதர்க்‌ கெல்லாம்‌ தலைப்படு மனிதன்‌,

தர்மமே உருவமாம்‌ மோஹன்‌ தாஸ்‌

கரம்‌ சந்திர காந்தி”யென்‌ றுரைத்தான்‌.

அத்தகைய காந்தியை அரசியல்‌ நெறியிலே

தலைவனாக்‌ கொண்டு புவிமிசைத்‌ தருமமே

அரசிய லதனிலும்‌ பிறஇய லனைத்திலும்‌

வெற்றி தருமென வேதம்‌ சொன்னதை

முற்றும்‌ பேண முற்பட்டு நின்றார்‌

பாரத மக்கள்‌; இதனால்‌ படைஞர்தம்‌

செருக்கொழிந்‌ துலகில்‌ அறந்திறம்‌ பாத

கற்றோர்‌ தலைப்படக்‌ காண்போம்‌ விரைவிலே.

(வெற்றி கூறுமின்‌! வெண்சங்‌ கூதுமின்‌! )

தரவுகொச்சக்‌ கலிப்பா

ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்‌

ஓதுமினோ வேதங்கள்‌! ஓங்குமினோ! ஓங்குமினோ!

தீதுசிறி தும்பயிலாச்‌ செம்மணிமா நெறிகண்டோம்‌!

வேதனைகள்‌ இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.

வஞ்சி விருத்தம்‌

திண்ணங்‌ காணீர்‌! பச்சை

வண்ணன்‌ பாதத்‌ தாணை;

எண்ணம்‌ கெடுதல்‌ வேண்டா!

திண்ணம்‌ விடுதலை திண்ணம்‌.

கலிப்பா

“விடுத லைபெறு வீர்வரை வாநீர்‌

வெற்றி கொள்ளுவீர்‌” என்றுரைத்‌ தெங்கும்‌

கெடுத லின்றிநந்‌ தாய்த்திரு நாட்டின்‌

கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய்‌ கின்றான்‌.

சுடுத லும்குளி ரும்‌உயிர்க்‌ கில்லை

சோர்வு வீழ்ச்சிகள்‌ தொண்டருக்‌ கில்லை;

எடுமி னோஅறப்‌ போரினை” என்றான்‌

எங்கோ மேதகம்‌ ஏந்திய காந்தி!

அறுசீர்‌ விருத்தம்‌

காந்திசேர்‌ பதும ராகக்‌

கடிமலர்‌ வாழ்ஸ்ரீ தேவி,

போந்துநிற்‌ கின்றா ளின்று

பாரதப்‌ பொன்னா டெங்கும்‌.

மாந்தரெல்‌ லாருஞ்‌ சோர்வை

அச்சத்தை மறந்து விட்டார்‌;

காந்திசொற்‌ கேட்டார்‌, காண்பார்‌

விடுதலை கணத்தி னுள்ளே.

எழுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்‌

கணமெனு மென்றன்‌ கண்முனே வருவாய்‌,

பாரத தேவியே, கனல்கால்‌

இணைவிழி, வால வாயமாஞ்‌ சிங்க

முதுகினில்‌ ஏறிவீற்‌ றிருந்தே.

துணைநினை வேண்டும்‌ நாட்டினர்க்‌ கெல்லாம்‌

துயர்கெட விடுதலை யருளி

மணிநகை புரிந்து திகழ்திருக்‌ கோலம்‌

கண்டுநான்‌ மகிழ்ந்திடு மாறே.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *