Site icon பாமரன் கருத்து

வீடில்லாப் புத்தகங்கள் | ஒரே புத்தகத்தில் நூறு புத்தக அறிமுகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

வீடில்லாப் புத்தகங்கள் | ஒரே புத்தகத்தில் நூறு புத்தக அறிமுகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட புத்தக அனுபவங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். இந்த ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக பல புத்தக அனுபவங்களை பெற முடியும்.

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எந்த ஊருக்கு சென்றாலும் பழைய புத்தகக் கடைகளை தேடிச்சென்று புத்தகங்கள் வாங்குவது என்பது அலாதி பிரியம். அவர் அப்படி பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களை பற்றிய பல விசயங்களை நேர்த்தியாக வாசகர்களுக்கு தந்திருக்கும் புத்தகம் தான் “வீடில்லாப் புத்தகங்கள்”

 

பொத்தகம்: வீடில்லாப் புத்தகங்கள்

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பதிப்பகம்: தேசாந்திரி

பக்கங்கள்:232

விலை:₹250


புத்தக வங்கி ஏன் அவசியம்?

சர் சார்லஸ் லாசன் என்பவர் எழுதிய மெமரிஸ் ஆப் மெட்ராஸ் என்ற புத்தகம் தனக்கு கிடைத்த விதம் குறித்த அனுபவத்தில் புத்தக வங்கி ஏன் அவசியம் என்பது பற்றி சிறப்பாக அவர் எழுதி உள்ளார். அதுபற்றி இங்கே பார்க்கலாம். 

 

படித்து முடித்து வேண்டாம் என நினைக்கிற புத்தகங்களை பகிர்ந்துகொள்ள புத்தக வங்கி ஒன்றை உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் தரலாம். யாருக்குப் புத்தகம் தேவையோ அவர்கள் இலவசமாக அந்த வங்கியில் இருந்து புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அல்லது கிராமப்புற மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். 

 

இதற்குத் தேவை ஓர் அறையும், ஒரு பொறுப்பாளர் மட்டுமே. புத்தகப் பரிமாற்றம் என்பது ஒரு அறிவியக்கம்  போல விரிவடைய தொடங்கும்போது தான் வாசிப்பு பரவலாகும். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள் 570 பொறியியல் கல்லூரிகள், 566 கலை அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில், எத்தனைக் கல்லூரி வளாகங்களில் புத்தகக் கடை இருக்கிறது? 

 

நோட்டு – பாடப் புத்தகங்கள் விற்கும் ஸ்டோர், வங்கி, கேண்டீன் ஆகியவற்றைப் போல, ஏன் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு புத்தகக் கடை திறக்கக் கூடாது? கல்லூரி நிர்வாகமே அதற்கு முனைப்பு காட்டலாம் தானே? பாடப் புத்தகங்களுக்கு வெளியே கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூகவியல் போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும் வாங்கி பயன் அடையவும் இதுபோன்ற புத்தகக் கடைகள் பெருமளவு உதவும் தானே? 

 

பொதுவாக விளையாட்டு, இசை, நுண்கலை போன்றவற்றில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கு இங்கே தனி கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், புத்தக வாசிப்பைத் தூண்டும், அதிகப்படுத்த உதவும் புக் கிளப், தரமான புத்தகக் கடை, புத்தகக் காட்சி போன்றவற்றில் எந்தக் கல்வி நிறுவனமும் ஆர்வம் காட்டுவதே இல்லை. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்களுடைய ஓய்வு நேரத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு புத்தகம் படித்துக்காட்ட உதவுகிறார்கள். 

http://noolagam.org/ என்ற இணையதளத்தில் பெரும்பான்மையான ஈழ எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள் இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கின்றன. தமிழில் இதுபோன்று பழந்தமிழ் நூல்களைப் பகிர்ந்துகொள்ள மதுரை திட்டம் என்ற இணையதளம் உதவுகிறது. குட்டன்பெர்க் என்கிற ஆங்கில இணையதளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல்வேறு துறை சார்ந்த ஆங்கிலப் புத்தகங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இவை எல்லாம் புத்தகப் பகிர்வு எவ்வளவு முக்கியமானதொரு சாளரம் என்பதன் அடையாளங்கள் ஆகும்.



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !
Exit mobile version