Site icon பாமரன் கருத்து

ஹீலர் பாஸ்கர் யார்? சொல்வதெல்லாம் உண்மையா ? | Who is Healer Baskar? | Tamil | இலுமினாட்டி | சுகப்பிரசவம் | கைது

“தடுப்பூசி போடவே போடாதீங்க”

“போலியோ கிருமியை பரப்பியதே மருந்து நிறுவன முதலாளிகள் தான்”

“சர்க்கரை நோயே ஏமாற்றுவேலை”

“சுகாதாரத்துறை அமைச்சருக்கு திராணி இருந்தா என்னோடு உட்கார்ந்து விவாதம் நடத்த சொல்லுங்க”

“நான் பேசுவதை கேட்டாலே நோய் குணமாகும்”

“கமல்ஹாசனை காப்பாற்றுங்கள்”

“சீமான் யாரிடம் ரிப்போர்ட் செய்கிறார்”

“இல்லுமினாட்டிகள் யார்?”

இதுபோன்ற அதிரடியான வசனங்களுக்கு சொந்தக்காரர். சமூகவலைத்தளங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிச்சயமாக மேற்கூறியவைகளுக்கு சொந்தக்காரர் யார் என்பது நிச்சயமாக உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் நிச்சயமாக அவரே தான் ஹீலர் பாஸ்கர். இணையத்தில் அவர் பேசாத தலைப்புகள் இல்லை எனலாம்.

Healer Baskar

மிக பிரபலமான இலுமினாட்டியில் ஆரம்பித்து இன்றைய அரசியல்வாதிகளான கமல்ஹாசன், சீமான் வரைக்கும் பேசுவார், மருத்துவத்தில் போலியோ, சர்க்கரை என ஆரம்பித்து தன்னால் கேன்சர் ,எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களையும் குணப்படுத்திட முடியும் என்கிறார்.

கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோரை கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை கைது செய்தவுடன் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் பலர் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் சமூக வலைதள நண்பர்கள். இதனால் யார் சொல்வதைத்தான் நம்புவது, உண்மையில் ஹீலர் பாஸ்கர் என்பவர் யார்? என தேடும் மக்களுக்கு அவர் குறித்த தகவல்களையும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தையும் விரிவாக இங்கே விளக்கியிருக்கிறேன்.

 

யார் இந்த ஹீலர் பாஸ்கர்? | Who is Healer Baskar?

 

இதற்கான பதிலாக ஹீலர் பாஸ்கர் அவராகவே ஒரு காணொளியை “Biography Of Healer Baskar” என்னும் தலைப்பில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் இதுதான்…

 

 

இளம் வயதில் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தேன் எத்தனையோ மருத்துவமனைகளுக்கு சென்றும் தனக்கு குணமாகவில்லை. குறிப்பாக உடல் பூராவும் சொரியாசிஸ், தற்கொலை செய்து கொள்ளலாம் எனும் அளவிற்கு கடுமையான தலைவலி, கண்பார்வை கோளாறு, தொடர் வயிற்று வலி, சத்தங்களை கேட்டால் அலர்ஜி போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தேன்.

அதன் பிறகு 1998 இல் சிவில் இன்ஜினியரிங் படித்தேன். ஆரம்பமாக 1500 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்த நான் பணியை விட்டு வரும்போது என்னுடைய சம்பளம் 2 லட்சம். ஆனால் அவை அனைத்துமே என்னுடைய மருத்துவ செலவுக்கே போனது. இனி அலோபதி மருத்துவம் சரிப்படாது என்றெண்ணி இயற்கை மருத்துவத்தை நோக்கி நகர்ந்தேன். என்னுடைய குருநாதர்களாக ரங்கராஜி, வேதாத்திரி மகரிஷி, கோயங்காஜி,சிவானந்த பரமஹம்சர், மருத்துவர் பஸூல் ரகுமான்,ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், ஆசிரியர் சுந்தரராஜன் என பலர்.

இதனை தொடர்ந்து பேசிடும் ஹீலர் பாஸ்கர் தன்வசம் இருக்கக்கூடிய CD மற்றும் புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார். பின்னர் அவரவர் தங்களது ஊரில் நிகழ்ச்சிகளை நடத்திட முன்வந்தால் தேதி தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சாட்டிலைட் தொலைக்காட்சியில் அரைமணி நேரம் ஸ்லாட் வாங்க முடிந்தால் உங்களோடு அமர்ந்து விவாதிக்க நானும் தயார் என கூறுகிறார் ஹீலர் பாஸ்கர்.

 

ANATOMIC THERAPY FOUNDATION ஹீலர் பாஸ்கர் குறித்து கூறுவது என்ன?

 

ANATOMIC THERAPY FOUNDATION என்பது ஹீலர் பாஸ்கர் அவர்களால் நடத்தப்படுகிற நிறுவனம். அதன் இணைய பக்கத்தில் ஹீலர் பாஸ்கர் யார் என்பதற்கு இவ்வாறான விளக்கம் தரப்பட்டுள்ளது.

Healer Baskar is a great saint of this generation. He is an expert in sharing his ideas with the common people. Irrespective of any particular field, he gets to know of those, first hand,either through research, experience or through scientific methods.He finds out new methods and teaches the common man, its benefits in the easiest way, in a service motive. He is working towards spirituality, and for the welfare of all the souls of the world.

ஹீலர் பாஸ்கர் இந்த தலைமுறையை சேர்ந்த மிக சிறந்த துறவி. அவர் தன்னுடைய அனுபவத்தில் பெற்றதையோ அல்லது பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதையோ அல்லது ஆராய்ச்சியின் மூலமாக அறிந்ததையோ சாதாரண பொதுமக்களுக்கு அவர்களுக்கு புரிந்திடும் வகையில் எடுத்துச்சொல்பவர் . அனைத்து மக்களும் நோய்களின்றி ஆரயோக்கியமாக வாழுவதற்க்காக உழைப்பவர் என விவரிக்கப்பட்டுள்ளது.

 

ஹீலர் பாஸ்கர் கைது ஏன் ? | Why Police arrested Healer Baskar?

 

திருப்பூரில் கார்த்திக்கேயன் என்பவர் தனது மனைவி கிருத்திகா என்பவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் . நஞ்சுக்கொடி வெளியேறாமல் அதிக ரத்தப்போக்கின் காரணமாக இறந்துபோனார் . இதன்பிறகு நடந்த விசாரனையில் youtube இல் வீடியோ பார்த்து சுகப்பிரசவ முயற்ச்சியில் ஈடுபட்டதாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சினையினால் கிருத்திகா இறந்துபோனதாகவும் தெரிவித்துள்ளார் . இதன்பிறகு கார்த்திகேயன் கைது செய்யபட்டார்.இந்த நிகழ்வு மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.

இந்த துன்பகரமான சம்பவம் நடந்து ஓய்வதற்குள் கோவையில் “நிஷ்டை” என்கிற அமைப்பு சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்தப்படும் என்கிற அறிவிப்பு நோட்டிஸ் whatsapp வாயிலாக மிகவேகமாக பரவியது.

நிஷ்டை அமைப்பின் விளம்பரம்

அதில் “இனிய சுகப்பிரசவம் ஒரு வரம், இலவச ஒருநாள் பயிற்சி முகாம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள்,ஸ்கேனிங் , இரத்தப்பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை. அனுமதி இலவசம், முன்பதிவு அவசியம்” என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

இதனை கண்டா இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் கோவை கிளை செயலாளர் ராஜேஷ் பாபு அவர்கள் ஆட்சியரிடம் புகார் அளிக்க விவகாரம் சூடுபிடித்தது. ஆட்சியர் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

ஹீலர் பாஸ்கர் சுகப்பிரசவம் குறித்து என்ன பேசியுள்ளார்?

 

வேந்தர் தொலைக்காட்சியிலும் youtube போன்ற சமூக வலைத்தளங்களிலும் சுகப்பிரசவம் குறித்து ஏராளமான வீடியோக்களில் பேசியிருக்கிறார் ஹீலர் பாஸ்கர். இறுதியாக பிரசவம் நடக்கப்போகும் நாளில் குழந்தை அல்வா போல வெளியேற ஹீலர் பாஸ்கர் இந்த மூன்று விசயங்களை செய்தால் போதும் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.

பனிக்குடம் உடைந்த பிறகு எந்தவித பயத்திற்கும் உள்ளாகாமல் மிக நிதானமாக பிறருடன் பேசுவது, டீ அருந்துவது, நடப்பது போன்ற அன்றாட பணிகளை செய்தால் போதும் என்கிறார். மேலும் உடலுக்கு சூடு கொடுப்பது, ஆக்சிஜன் அதிகப்படுத்துவது, தொங்குவது போன்ற மூன்று அடிப்படையான விசயங்களை செய்வதன் மூலமாக குழந்தையை அல்வா வை போன்று வெளியிலே எடுக்கலாம் என்கிறார்.

 

கேன்சர் மற்றும் எய்ட்ஸ் தன்னால் குணப்படுத்த முடியும் – ஹீலர் பாஸ்கர்?

 

Behindwoods என்னும் youtube சேனலில் அளித்துள்ள பேட்டியில் [வீடியோ] தன்னால் கேன்சர், எய்ட்ஸ், கருப்பை கட்டி, சொரியாசிஸ் போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்திட முடியும் என கூறுகிறார். ஆச்சர்யமடைந்த நிரூபர் ‘கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்திட விஞ்ஞானிகள் என்னென்னவோ செய்தும் முடியவில்லையே? என கேட்க. மிகவும் கூலாக எந்த நோயாக இருந்தாலும் என்னிடம் ஒரே வழிமுறை தான் இருக்கின்றது.

தான் கோவையில் நடத்துகின்ற 5 நாள் வகுப்பிற்கு வந்து உட்கார வேண்டும், காலை 7 மணிக்கு தொடங்கிடும் தன்னுடைய பேச்சு 8 மணி வரை தொடரும். முதல் இரண்டு நாட்களில் நோய்கள் வருவதெப்படி, அதனை எப்படி குணப்படுத்திட முடியும் எனவும் மூன்றாம் நாளில் மனதை பற்றியும் நான்காம் நாளில் கர்மயோகம் பக்தியோகம் தொடங்கி அரசியல் பொருளாதாரம் சட்டம் உட்பட அனைத்து குறித்தும் பேசுவதாக தெரிவித்துள்ளார். ஐந்தாம் நாள் முழுவதும் கேள்வி பதில்.

இதில் எப்படி நோய் குணமாகும் என்றால் ‘நான் ஐந்து நாட்களில் பேசியதை கடைபிடித்து வந்தால் உடலில் புதிதாக செல்கள் உருவாகும் எனவும் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும்” எனவும் கூறுகிறார்.

 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலுமினாட்டிகள் – ஹீலர் பாஸ்கர்?

 

FX16 NEWS இல் அளித்துள்ள பேட்டியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரிய கட்சிகள் அனைத்துமே இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கட்சிகள் தான். பெரியார் முதற்கொண்டு திமுக அதிமுக, இன்று அரசியலுக்கு வந்துள்ள சீமான் கமல் ரஜினி உள்ளிட்ட அனைவருமே இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். எங்கேயேனும் சுயேச்சைகளோ சின்ன சின்ன கட்சிகளோ இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் இருக்கலாம்.
மேலும் அவர் கூறிடும்போது இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் வளரவே முடியாது எனவும் கூறுகிறார்.

**************************************

 

ஹீலர் பாஸ்கர் குறித்த என்னுடைய பார்வையும் சில கேள்விகளும். கேள்விகள் புரிதலுக்கான அடிப்படை, இந்த கேள்விகள் உங்களுக்கும் எழுந்தாலோ அல்லது இந்த கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கு தெரிந்தாலோ Comment இல் பதிவிடுங்கள்.

 

ஹீலர் பாஸ்கரிடம் நான் கண்டு வியந்தவை?

 

இத்தனை மணி நேரம் இவ்வளவு தலைப்புகளின் கீழ் பேச வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் படிப்பிற்காக செலவு செய்திருக்க வேண்டும். அவர் சொல்வது சரி தவறு என்பதற்கு முன்பாக அவரின் கடுமையான உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

ஹீலர் பாஸ்கர் மருந்தில்லா மருத்துவம்

கோயம்புத்தூரில் பேசுகின்ற அந்த மரியாதையான தமிழின் அழகு கேட்போரை நிச்சயமாக நம்பிட வைக்கிறது. தான் அறிந்திட்ட விசயங்களையோ தன்னுடைய சிந்தனையையோ பிறரிடம் எவ்வாறு எடுத்துசொல்லிட வேண்டும் என்பதற்கு ஹீலர் பாஸ்கர் மிக சிறந்த உதாரணம்.

 

ஹீலர் பாஸ்கருக்கு வந்த நோய்கள் அனைத்தும் குணமானது எப்படி?

இளம் வயதில் தனக்கு இல்லாத நோயே இல்லை என தெரிவித்துள்ளார் ஹீலர் பாஸ்கர். தான் வேலைக்கு சென்று கொண்டிருந்த வரையில் அந்த நோய்களின் தாக்கம் தனக்கு இருந்ததாகவும் தான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்ததாக ககூறிடும் அவர் எவ்வாறு பொறியியல் துறையில் பட்டம் பெற முடிந்தது . அதைக்கூட அவரது கடினமான முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதி விட்டுவிடுவோம்.

தனக்கு இருந்த நோய்கள் தான் நான் அனைத்தையும் கற்க காரணம் எனக்கூறிடும் ஹீலர் பாஸ்கர், பலபேரை தன்னுடைய குருநாதர்களாக கூறுகிறார். ஆனால் யார் சொன்ன மருத்துவ முறைகளை கொண்டு இவருக்கு இருந்த நோய்கள் குணமானது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது? இவருக்கும் யாரேனும் 5 நாள் வகுப்பெடுத்தார்களா என்பதும் தெரியவில்லை.

இலுமினாட்டிகள் உண்மையானவை என்றால் ஆதாரம் எங்கே?

தான் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தபோது மருந்துக்கடைகளின் முதலாளி யார் என தேடிய போது இறுதியாக ஒரு 13 பேர் வருகிறார்கள். அவர்களை பற்றி தேடியபோது இலுமினாட்டிகள் என தெரிய வந்தது என்கிறார்.

பின்வரும் வீடியோவில் [13 நிமிடம் முதல்] இலுமினாட்டிகள் குறித்த சந்தேகங்களை நிரூபர் முன்வைக்க அவர் ஹீலர் பாஸ்கர் எதற்குமே சரியான பதிலை தரவே இல்லை. மாறாக கேள்வி கேட்பவரை ‘இப்படி சொல்றேன் கேளுங்களேன்’ என சொல்லி சொல்லி கேள்வி கேட்பவரை மடக்குகிறார்.

நிரூபர் : நீங்கள் பேசுவது 2004 இல் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் எழுதிய Confessions of an Economic Hit Man என்ற புத்தகத்தின் கருத்தாக இருக்கலாமா?

ஹீலர் பாஸ்கர் : நான் அந்த புத்தகத்தை படிக்கவில்லை [இலுமினாட்டிகள் குறித்து படிப்போர்கள் தவறாமல் படித்திடும் புத்தகம் இது .பல புத்தகங்களை படித்திடுவதாக கூறிடும் ஹீலர் பாஸ்கர் இந்த புத்தகத்தை படிக்கவில்லை என கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது, நம்ப கூடியதாக இல்லை]

நிரூபர் : இலுமினாட்டிகள் குறித்து பேசிடும் உங்களிடம் ஆதாரம் எதாவது இருக்கிறதா?

ஹீலர் பாஸ்கர் : ஆதாரம் என்றால் இலுமினாட்டியாகிய நான் இந்த அரசியல்வாதியை பினாமியாக வைத்திருக்கிறேன் னு எழுதிருக்கணுமா? முதலில் கேள்விகளை விட்டுவிட்டு நான் பேசிய 8 மணிநேர வீடியோவை பாருங்க

கடைசிவரையில் ஆதாரம் என்பதையே ஒப்புக்கொள்ள மறுக்கிறார் ஹீலர் பாஸ்கர்

 

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே இலுமினாட்டிகள் என்பது எப்படி?

 

திமுக அதிமுக சீமான் கமல் ரஜினி உட்பட அனைவருமே இலுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார் ஹீலர் பாஸ்கர் அவர்கள். அப்படியானால் நாளை நான் கஷ்டப்பட்டு உழைத்து பெரிய ஆளாக வந்தாலும் கூட என்னையும் இலுமினாட்டிகளின் ஆதரவால் வந்தவன் என்பாரா என்கிற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.

ஹீலர் பாஸ்கர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தல் இலுமினாட்டிகள் என்போர் நூறுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள் கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள். இவர்களை எப்படி சிலநூறு நபர்கள் கட்டுப்படுத்திட முடியும்?

இந்த பதிவை ஹீலர் பாஸ்கர் படித்தால் அதற்க்கு பதிலாக இப்படி தான் சொலவார் ” யாருங்க சொன்னது நேரடியா உங்களை இலுமினாட்டிகளே கட்டுப்படுத்துவங்கனு” ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக இருப்பார்கள், உங்களை போன்றவர்களை கட்டுப்படுத்திட இலுமினாட்டிகளின் ஆட்களே போதும்”

ஆனால் என்னுடைய கேள்வி அதுவல்ல “இத்தனை கோடி பேரை இலுமினாட்டிகள் கட்டுப்படுத்தும்போது ஒருவர் கூட வெளியில் வந்து உண்மையை கூறிடவில்லையே? அனைவரையுமேவா குடும்பத்தை அழித்துவிடுவேன் , கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட முடியும்?

சாதாரண அமைச்சரைகூட கட்டுப்படுத்திடும் இலுமினாட்டிகளால் ஹீலர் பாஸ்கர் போன்ற சிலரை கட்டுப்படுத்திட முடியாதா என்ன ? இந்த கேள்விக்கும் மழுப்பலாகா ” அவங்க ரேஞ்சே வேறங்க , என் லெவலுக்கெல்லாம் வரமாட்டாங்க ” என கூறுகிறார் .

கேன்சர், எய்ட்ஸ் உள்ளிட்டவற்றை குணப்படுத்திட எப்படி முடிகிறது உங்களால்? ஆதாரம் இருக்கிறதா?

இந்த கேள்விகளை தன்னிடம் கேட்கும் பலரை மிகவும் லாவகமாக தன்னுடைய பதிலால் முடக்கிவிட பார்க்கிறார். ஆமாம் அப்படி கேட்கும் போது “ஆதாரம் என்று எதனை சொல்கிறீர்கள்? அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது, ஆனால் என்னால் குணப்படுத்திட முடியும் என்கிறார்.

அதனையும் தாண்டி கேள்வி கேட்டால் “கேன்சர் எய்ட்ஸ் குணப்படுத்திட முடியாது என்று கூறும் மருத்துவரை நம்புகிறீர்கள். குணப்படுத்த முடியும் என்று சொல்லும் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்”

இவ்வாறு மிக சிறப்பாக பேசுகிறார் ஹீலர் பாஸ்கர். இதனை கேட்கும்போது நம்முடைய மனசும் ஹீலிங் ஆகத்தான் செய்கிறது ஆனாலும் கேள்விகளுக்கு பதில் இல்லையே என்கிற ஏமாற்றமும் இருக்கத்த்தான் செய்கிறது.

சரி இவர் எப்படித்தான் இந்த நோய்களை குணப்படுத்திட முடியும் என்கிறார் என்று பார்த்தால் ” தான் நடத்துகின்ற 5 நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தான் சொல்வதைப்போல நடந்துகொண்டால் உடலே நோயை குணப்படுத்திக்கொள்ளும் என்கிறார்

தடுப்பூசி போடவே கூடாது என்றால் போலியோ நோய் குணமானது எப்படி?

நிரூபர் : தடுப்பூசி போடுவது தேவையே இல்லையா? அவற்றால் தானே போலியோ அம்மை போன்ற நோய்கள் இல்லாமல் போனது?

ஹீலர் பாஸ்கர் : தடுப்பூசி கண்டுபுடுச்ச மருந்து கம்பெனிக்காரன் தான் போலியோ நோய் கிருமியையும் அம்மை நோய்க்கிருமியையும் பரப்புனது, பிறகு அவனே அதற்கு தடுப்பூசியையும் தரான்

நிரூபர் : போலியோ சங்ககாலம் முதற்கொண்டு இருந்துவருகின்றது இலுமினாட்டி வந்து 250 ஆண்டு ஆகிறதென்று நீங்க தான் சொல்றிங்க, மருந்து கண்டுபிடிச்சு தடுப்பூசி போடுவதும் சில பத்தாண்டாண்டுகளில் தான் . ஏதோ போலியோ நேத்து வந்த மாதிரி சொல்றிங்க ?

Duration 9 Mins to 10 Minutes

ஹீலர் பாஸ்கர் : (என்ன சொல்வதென்று தெரியாமல்) மழுப்பிக்கொண்டே ஏங்க போலியோங்கிறது ஒரு நோய் அதை உருவாக்குனது மருந்து கம்பெனிகள் தான்

நிரூபர் : அப்போ இருந்த மாற்று திறனாளிகள் இன்று இல்லையே அப்போ தடுப்பூசியால் தான போலியோ கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது ?

ஹீலர் பாஸ்கர் : (வழக்கம் போல) ஏங்க தகவலை இருவாக்குவதும் அவன்தான் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்துமே அவனது கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது .

இந்த பதிலைத்தான் ஹீலர் பாஸ்கர் ஒவ்வொருமுறை தரவுகளை கேட்கும்போதும் கூறுகின்றார் .

நெடுங்காலமாகவே போலியோ நோய்க்கிருமி இருந்தது உண்மை . தற்போது போலியோ இல்லாத நாடாக இந்தியா முன்னேறியிருப்பதும் உண்மை .

ஹீலர் பாஸ்கர் சொல்வது அனைத்துமே தவறா ?

அப்படி சொல்லிவிட முடியாது . தற்போதைய வியாபார மருத்துவத்துறையில் அவர் எழுப்புகின்ற சந்தேகங்கள் அனைத்துமே உண்மையானவை .

அதைபோலவே அவரது பல பேச்சுக்கள் நாம் நலமுடன் வாழ உதவிகரமாக இருக்கின்றது .

இதற்கு உதாரணமாக , நம்மாழ்வார் ஒரு நிகழ்ச்சியில் கால்களை இருக்கையின் மீது வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார் . அதற்கு காரணமாக ஹீலர் பாஸ்கர் அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்திருப்பார் .

ஹீலர் பாஸ்கர் கூறியது இதுதான் “உடலின் அதிக அளவில் செயல்படவேண்டிய பகுதிகள் அனைத்துமே இடுப்புக்கு மேலேதான் இருக்கின்றன , நாம் கால்களை தொங்கவிடும்போது தேவையில்லாமல் ஆற்றலை செலவழிக்கிறோம் . ஆகவே கால்களை இருக்கையில் அமரும்போது
தொங்கப்போடாமல் மடக்கிக்கொண்டு அமருங்கள் “

ஹீலர் பாஸ்கரை நம்புவதில் உள்ள சிக்கல் என்ன ?

ஹீலர் பாஸ்கர் மருத்துவத்துறையின் அடித்தளத்தையே அசைத்து பார்க்கிறார் . ஆனால் அதனை நிரூபியுங்கள் என கேட்டால் அதற்கு அவரிடம் எதுவுமே இல்லை . இன்னும் அழுதிக்கேட்டால் என்னுடைய பேச்சுக்களை கேளுங்கள் , நான் நடத்துகின்ற வகுப்புகளுக்கு வாருங்கள் என அழைக்கிறார் .

ஏராளமானவர்களுக்கு எய்ட்ஸ் நோயை குணப்படுத்தியதாக சொல்லும் அவர் அவர்களை ஆதாரமாக காட்டாத போது எப்படி நம்புவது ?

இவ்வளவு தலைப்புகளின் கீழ் பேசிடும் ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு ஆதாரம் எவ்வளவு முக்கியமென்பது தெரியாததா ?

சுகப்பிரசவத்தில் ஹீலர் பாஸ்கர் மீது தவறா ?

சுகப்பிரசவம் நடக்க என்ன என்ன சாப்பிட வேண்டும் எப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்குவது தவறல்ல .

எந்த அவசர கால மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் முன் அனுபவம் இல்லாத கணவனை பிரசவம் பார்க்கசொல்லுவது எவ்வளவு ஆபத்தானது ?

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்தபோது இறந்த கிருத்திகா மற்றும் கணவர்

மிகப்பெரிய அளவில் செலவு செய்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி பிரசவ கால மரணங்களை குறைக்க அரசு பாடுபட்டு கொண்டிருக்கும்போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் இவரது முறைகளை ஊக்குவிப்பதை எப்படி அனுமதிக்க முடியும் ?

சரி அவர்படியே விட்டுவிட்டாலும் , கிருத்திகா போன்ற பெண்கள் இறந்துவிட்டால் அதற்கு பொறுப்பேற்பது யார் ?

தற்போது இறந்த கிருத்திகா மற்றும் அவரது கணவர் கூட ஹீலர் பாஸ்கர் அவர்களின் நிகழ்ச்சியை பார்த்ததாக கூறுகிறார்கள் .

பாமரன் கருத்து 

ஹீலர் பாஸ்கர் தொடர்ந்து இயற்கை வாழ்வியல் முறைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் . மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடலாம் .

ஏற்கனவே இருக்கக்கூடிய ஆங்கில மருத்துவ முறைகளுக்கு எதிரான தனது கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கலாம் . தவறே இல்லை . ஆனால் அப்படி ஒரு விசயத்தை கூறிடும்போது அதற்கான ஆதாரங்களை சமர்பித்து அனுமதி வாங்க வேண்டும் அல்லது ஆராய்ச்சி முடிவுகளை பொது வெளியில் மக்களிடமாவது காட்டிட வேண்டும் .

வெறும் பேச்சுக்களால் எதனையும் சிறுமைப்படுத்தி எழுதிட பேசிட முடியும் . ஆனால் ஆதாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக செய்திடுவதே மக்களுக்கு நன்மை பயக்க கூடியது .

பொதுமக்களுக்காக உண்மையை சொல்கிறேன் என சொல்லிடும் ஹீலர் பாஸ்கர் 1 . 5 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் . அப்படியானல் கார்பரேட்டை எதிர்க்கும் ஹீலர் பாஸ்கர் கார்ப்பரேட் கம்பெனிபோல தன்னுடைய நிறுவனத்தை நடத்திவருகிறாரோ என்பதும் கேள்வியாக இருக்கின்றது . அவர் பாஷையில் சொல்லப்போனால் “இவரும் இல்லுமினாட்டியின் ஆளாக இருப்பாரோ”.

உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .

பாமரன் கருத்து

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version