Site icon பாமரன் கருத்து

இந்தியாவின் வெற்றிக்கு தமிழன் ஒருவனே காரணமென கொண்டாடலாமா ?

நேற்று நடந்த பங்களாதேஷிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. அந்த வெற்றி அவ்வளவு எளிதானதாக கிடைத்துவிடவில்லை . தோல்வியின் விளிம்பில் சிக்கிக்கொண்டிருந்த இந்திய அணியை தினேஷ் கார்த்திக் (தமிழகம்) அதிரடியான ஆட்டம் மீட்டெடுத்தது .

 

உண்மையாலுமேதினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது , தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த இந்திய அணியை மீட்டெடுத்த தினேஷ் கார்த்திக் கொண்டாட்டத்திற்கு உரியவர் .

 

இந்த போட்டியில் அவரது பங்களிப்பு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானதாக இருந்திருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த இந்திய அணியின் பங்களிப்பே வெற்றிக்கு காரணம் .

 

ஆனால் சிலர் வெற்றியை கொண்டாடும் விதம் சரியானதாக இல்லையோ என யோசிக்க தோன்றுகிறது .

 

  

முன்பெல்லாம்இந்திய அணி வெற்றிபெற்றால் , “இந்தியா வெற்றி” என்று கொண்டாடுவோம்… தங்களுக்கு பிடித்தவீரர் நன்றாக ஆடியிருந்தால் , அவரின் திறமைபற்றி புகழ்பாடுவோம். ஆனால் நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு, தமிழகத்தில் கவனிக்கத்தக்க சில பிரசுரங்கள் மற்றும் மீம்ஸ்கள் சமூக  வலைதளங்களில் பரவின. குறிப்பாக ” தமிழனால் இந்தியா வென்றது #தமிழன்டா தமிழனால் தலைநிமிர்ந்த இந்தியா” முதலியன சில குறிப்பிடத்தக்கவை.

 

 

“நாம் இந்தியன் என்பதை மறந்து தமிழனாய் பிரிந்து கிடக்கிறோமா ??” 

அண்மையில் சமூக வலைதளங்களில் தமிழன் , தமிழன் என மீம்ஸ்கள் பரப்பப்படுவதை காண முடிகின்றது . உண்மையில் சொல்லப்போனால் “தமிழன் ” என குறிப்பிடப்படும் மீம்ஸ்கள் அதிக அளவில் மக்களால் ஷேர் செய்யவும் படுகின்றது . இதனை பயன்படுத்திக்கொள்ள மீம்ஸ் கிரீயேட்டர்கள் , சில செய்தித்தாள்கள் “தமிழன்டா”  “தமிழனா இருந்தா ஷேர் செய்யுங்க ” என செய்திகளை போட்டு பரப்புகின்றன .

 

அவர்கள் பரப்புகிறார்கள் என கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது , ஏனெனில் அவை மக்களின் மனதில் சிறுக சிறுக வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடலாம் என்கிற அச்சம் நமக்கு இருக்கின்றது,  அச்சமே இந்த பதிவிற்கு காரணம் . 
தமிழன் என்ற உணர்வு இருக்க கூடாது என்பதில்லை , ஆனால் அதனைவிட இந்தியன் என்ற உணர்வு மேலோங்கி இருக்கவேண்டும் . நம் முன்னோர்கள் சுதந்திர போராட்டத்தில உயிர்த்தியாகம் செய்தது தமிழகத்திற்கு மட்டுமில்லை … இந்தியா திருநாட்டிற்கும்தான்.

 

வெறும் like, share, view க்கிற்காக பரவிடும் செய்திகளில் மயங்கி இந்தியன் என்ற உணர்வினை மறந்துவிடாதீர்கள் .

 

தமிழா! இன உணர்வு இருக்கட்டும்
இந்தியன்! என்ற உணர்வு மேலோங்கி நிற்கட்டும் .

 

க . வினோத் குமார்

Share with your friends !
Exit mobile version