Site icon பாமரன் கருத்து

Section 377 Cancelled : இனி ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து செல்வதே சந்தேகமாக பார்க்கப்படுமே?

 

சில தீர்ப்புகள் ஜனநாயக ரீதியாக பார்க்கும் போதும், அந்த பிரச்சனைக்குள் இருப்போர் நிலையிலிருந்து பார்க்கும் போதும் சரியானதாக தோன்றலாம். ஆனால் சராசரியான  ஒரு சமூகத்தில் சில தீர்ப்புகள் மிகப்பெரிய தாக்கங்களையும் கேள்விகளையும் எழுப்ப தவறுவதில்லை. Section 377 நீக்கம் பெருவாரியாக வரவேற்கப்பட்டாலும் இந்த தீர்ப்பு சில கேள்விகளையும் முன்வைக்காமல் இல்லை, சில சங்கடங்களை உருவாக்காமலும் இல்லை. அவ்வாறு எழுகின்ற கேள்விகள் என்ன? (Section 377 Cancelled : இனி ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து செல்வதே சந்தேகமாக பார்க்கப்படுமே?) அதற்கு என்னமாதிரியான பதில்களை சிலர் கூறுகிறார்கள். நாம் எவ்வாறு இந்த பிரச்சனையை கையாளவேண்டும் என்பதனை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

 


 

Section  377

 

 

இயற்கை நெறிகளுக்கு மாறாக உறவு வைத்துக்கொள்ளுவது தண்டனைக்கு உரிய குற்றம். இதுதான் பிரிவு 377 இல் கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவானது பிரிட்டிஷ் சட்டப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பல நாடுகளில் ஓரின பாலியல் தொடர்பு குற்றமில்லை என கூறப்பட்டபோதும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் Section 377 போன்ற பிரிவுகள் தன்பாலின உறவு கொள்வோரை குற்றவாளிகளாகவே அங்கீகரித்து வந்தது.

 


 

Section 377 ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம் 

 

செப்டம்பர் 06 2018 அன்று  “ஓரின பாலியல் தொடர்பு குற்றமில்லை” என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வெளியிட்டது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்ட சில சொல்லாடல்கள் இந்த தீர்ப்பிற்க்கான முக்கியத்துவத்தையும் இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு விசாலமானதாக இருக்கின்றது என்பதனையும் உணர முடியும்.

 

“சமூக அறநெறி எந்தவொரு தனிமனிதனின் சுதந்திரத்தையும் பறிக்க முடியாது”

 

இந்த மிகப்பெரிய பொதுத்துவமான வார்த்தைகளை உதிர்த்தவர்கள் இந்தியாவின் உயர் நீதிபதியான தீபக் மிஸ்ரா அவர்களும் நீதிபதி கான்வில்கர் என்பவரும் தான்.

 

“இவ்வளவு நாட்களாக பாரபட்சமாக நடத்தப்பட்டதற்கு ஒட்டுமொத்த சமூகமும் LGBTQ சார்ந்தோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – நீதிபதி மல்ஹோத்ரா

 

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இதே உச்சநீதிமன்றம் அளித்திருந்த ‘அன்றாட வாழ்வில் தனி மனித சுதந்திரம் அடிப்படையான உரிமை’ என்பதனை மேற்கோள் காட்டி  செக்ஸ் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என குறிப்பிட்டது நீதிமன்றம். இதுபோன்ற பல கருத்துக்களை முன்வைத்து Section 377 ஐ ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு  LGBTQ இல் உள்ளோரிடம் மட்டுமல்லாது ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய அனைவரிடமும் மிகுந்த வரவேற்ப்பினை பெற்றது.

 

தீர்ப்பு மட்டுமே போதுமானதல்லவே 

 

நமது சமூகம் கட்டமைக்கப்பட்டவிதம் ஒரு ஆணும் இன்னொரு ஆணும் சேர்ந்து செல்வது , தங்குவது பாதிப்பில்லாத ஒன்று , அதேபோலத்தான் பெண்களுக்கும் . காரணம் ஒருபாலர்கள் பாலியல் ரீதியிலான  உறவுகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற எண்ணம் தான் . ஆனால் இப்போதைய இந்த section 377 பற்றி பரவலாக பேச ஆரம்பித்தபிறகு அந்த சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை ஒருபாலின உறவுமுறைகள் இருந்துவந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த சாமானிய மக்கள் கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் .

 

இனி தன்னுடைய மகளோ மகனோ நண்பர்களுடன் தங்கப்போகிறேன் என்றாலோ வெளியில் செல்கின்றேன் என்று சொன்னாலோ  நிச்சயமாக ஒருபாலின உறவுமுறையில் சிக்கிக்கொள்வார்களோ என்கிற அச்சம் வந்தே தீரும் . அப்படி வருவதை குற்றமென்றும் சொல்ல முடியாது .

 




இந்த பிரச்சனையை அணுகுவது எப்படி ?



இதனை அணுகுவதற்கு முன்பதாக இதற்கான காரணம் என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள் . நாம் இதுவரை குற்றமென்று கருதிய ஒருபாலின உறவுமுறை என்பது செயற்கையானது அல்ல . அது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உருவாகக்கூடிய இயற்கையான உணர்வு என மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள் .

 

Section 377 LGBTQ March



ஆக இப்படி ஒருபாலின உறவு முறையில் அனைவரும் ஈடுபட வாய்ப்பில்லை . ஆண் பெண் இருவருக்குமிடையில் வரும் ஈர்ப்பு தான் பெரும்பாலனவர்களுக்கு வரக்கூடியது . ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையோடு சக தோழிகளுடனும் தோழர்களுடனும் அனுப்பிடலாம் .

தேவையற்ற சந்தேகங்கள் குழப்பங்களையே உண்டாக்கும் . தற்போதய நீதிமன்ற உத்தரவு என்பது ஏற்கனவே அதில் ஈடுபட்டு இருக்கக்கூடிய நபர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் சக மனிதர்களே என்பதனை அரசியல் சட்டத்தின் படி நிறுவுவதற்கான ஏற்பாடு தான் . இனி ஒருபாலின உறவுமுறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஊக்கமளிக்கக்கூடிய விசயம் அல்ல . இதனை உணர்ந்துகொண்டால் சராசரி பெற்றோருக்கும் நண்பர்களுக்கு புரிதல் ஏற்படும் .

 


 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version