Site icon பாமரன் கருத்து

அடுத்த ஆப்பு : TNPSC தேர்வை இனி தனியார் நடத்தும்

தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையமான TNPSC மூலமாகத்தான் தற்போது தமிழக அரசுப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் . தற்போது எழுத்து தேர்வின் மூலமாக ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளபடியால் அதனை திருத்தி முடிவுகளை வெளியிட பல மாதங்கள் ஆகின்றன .

 

 

இந்த கால தாமதத்தை குறைக்கவும் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன் மூலமாக தேர்வெழுதும் முறைக்கு மாறிட தமிழக அரசு தீமானித்துள்ளது . இதற்காக டெண்டரும் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .நிச்சயமாக தமிழக அரசு கூறுவதைப்போல ஆன்லைன் தேர்வில் முடிவுகளை வெளியிடுவது எளிமையானது , விரைவாகவும் செய்திட முடியும் தான் .

 

இதில் எங்கு பிரச்சனை வருகிறதென்றால் , இந்த தேர்வுகளை நடத்திட தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பதுதில்தான் .

 

அன்புமணி ராமதாஸ் அவர்கள் மிகத்தெளிவாக தனது அறிக்கையில் தனியாரின் பங்களிப்பால் வரக்கூடிய ஆபத்துகளை பட்டியலிட்டுள்ளார் . இதுவரை TNPSC நபர்களே தேர்வறைகளில் நடத்துனர்களாக இருந்தார்கள் , தனியாரிடம்  ஒப்படைக்கப்பட்டால் தேர்வு நடத்துபவர் உள்ளிட்ட அனைவருமே அந்த தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுபவர் தான் . ஒரு இடத்திற்கு ஒரு மேற்பார்வையாளரை மட்டும் TNPSC அனுப்பும் .

 

 

இந்த புதிய முறையில் தேர்வுத்தாளை தயார் செய்து TNPSC தனியார் நிறுவனத்திடம் கொடுத்துவிட வேண்டும் . அவர்கள் அதனை மின்னணு வடிவத்திற்கு மாற்றி upload செய்து சரியாக இயங்குகிறதா என பார்த்து  சோதனை செய்ய சில நாட்களுக்கு முன்பாகவே தேர்வுத்தாளை அந்த தனியார் நிறுவனத்திடம் வழங்க வேண்டி இருக்கும் .

 

அரசு தேர்வினை நடத்தும்போதே தேர்வுத்தாள் முன்னரே வெளிவந்துவிட்டது  , காசு கொடுத்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன . இந்த சூழ்நிலையில் தனியார் நிறுவனத்திடம் அனைத்தையும் ஒப்படைப்பது திருடன் கையில் சாவியை கொடுப்பதற்கு ஒப்பானது .

 

சம்பாதிப்பதே தனியார் நிறுவனத்தின் நோக்கம்

 லாபமே முதன்மையானதாக இருக்கக்கூடிய தனியார் துறையிடம் அரசின் செயல்பாடுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கப்போகும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கொடுப்பது நிச்சயமாக ஆபத்தானது .

 

 

தற்போது லட்சகணக்கான மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் கலந்துகொள்கிறார்கள் , இந்த தேர்வுகளுக்கு பின்னால் நடக்கும் பயிற்சி மையங்கள் சார்ந்த பிசினஸ் என்பது கட்டற்ற அளவில் சென்றுகொண்டு இருக்கின்றது . ஒவ்வொரு பயிற்சி நிறுவனமும் அதிகப்படியான தேர்ச்சியை காட்டுவதற்கு பல முயற்சிகளை நேர்மையான முறையிலும் குறுக்கு வழியிலும் செய்ய முயற்சித்துக்கொண்டே இருக்கின்றன . ஆகவே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .

நம்பிக்கையே வாழ்க்கை

பல குற்றசாட்டுகள் வந்தாலும் தேர்வினை நடத்துவது அரசு என்பதனால் மாணவர்களுக்கு TNPSC மீதான நம்பிக்கை குறையவில்லை . ஒரு போட்டி நேர்மையாக நடக்கிறது என்ற நம்பிக்கை மிக முக்கியமானது . தனியார் நிறுவனத்திடம் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைப்பதால் இந்த நம்பிக்கையில் பெரும் விரிசல் ஏற்படப்போவது உறுதி . இது நல்லதல்ல .

 

கணிணி முறையில் தேர்வு நடத்துவதை அரசாங்கமே செய்திட வேண்டும் . இதற்கான கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு அமர்த்தி அரசே தனது கட்டுப்பாட்டில் தேர்வு நடத்தும் பொறுப்பை வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் .

 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version