Site icon பாமரன் கருத்து

பிளாஸ்டிக் அரிசி உண்மையானதா? பெரும் வணிகர்களின் சதியா ?

[படித்துவிட்டு உண்மையென்று பட்டால் மட்டும் பகிருங்கள்]

அண்மையில் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி , அது உற்பத்தி செய்யப்படும் வீடியோ என பரவலாக உலா வந்து கொண்டிருக்கின்றது. அதனை பார்த்த நம் மக்களும் ஏன் நானும் சாப்பிடும் போது ஒரு உருண்டையை உருட்டி மேல் எழும்புகிறதா ? அரிசி தண்ணீரில் மிதக்கிறதா என்பதை தான் பார்த்தோம்.

ஆனால் பின்வரும் கேள்விகள் நம் மனதில் எழுந்தால் பிளாஸ்டிக் அரிசியின் நோக்கத்தினை நாம் உணரலாம்.


கேள்வி 1 : இதுவரை பிளாஸ்டிக் அரிசியை எங்காவது பிடித்திருக்கிறார்களா? 

ஒரு அக்கா தன் பிள்ளைக்கு சோறு கொடுக்க வைத்திருந்த சோறில் சிறிதளவினை உருட்டி தரையில் வீசுவார் அது மேலெழும்பும். ஆனால் கைகளில் ஒட்டாது. இது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்த பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிப்பு.

உண்மையாலுமே பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது 2016 ஆம் ஆண்டு நைஜீரியாவில் கைப்பற்றப்பட்ட சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2.5 டன் அரிசியே ஆகும். ஆனால் நைஜீரியா நாட்டு உணவு பாதுகாப்புத்துறை சோதனை செய்து கைப்பற்றப்பட்ட அரசியில் அரிசிக்கு உரிய அனைத்து அளவீடுகளும் மிக சரியாகவே இருக்கின்றன என அறிக்கை அளித்து விட்டன. அது பாக்டீரியா தொற்று இல்லாமல் இருப்பதற்காக பதப்படுத்தப்பட்ட அரிசி என்றும் கூறியிருக்கிறார்க்ள .

தெலுங்கானா ஹோட்டல்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்த படுவதாக குற்றசாட்டு எழுந்தது.

இதுவரை தமிழகத்திலும் ஏன் இந்தியாவிலும் கூட பிளாஸ்டிக் அரிசியை அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை .

கேள்வி 2 : அப்படியென்றால் பிளாஸ்டிக் அரிசி இல்லவே இல்லையா ?

இருக்கிறது. ஆனால் அது முழுவதுமான பிளாஸ்டிக் அரிசி கிடையாது. உடைந்த அரிசி துண்டுகளை இணைத்து முழு அரிசியாக மாற்றி விற்பது. அதில் சில வேதிப்பொருள்களை பயன்படுத்துவது நடக்கிறது.

இன்னும் எளிமையாக நாம் புரிந்து கொள்ள இந்த பின்வரும் கேள்விகள் உதவும்.

கேள்வி 3 : தண்ணீரில் அரிசி மூழ்கிவிடும். பிளாஸ்டிக் அரிசி மிதக்கும். 

இதுதான் உண்மை. அப்படியென்றால் ஒரு 25 கிலோ மூட்டைக்கு நிகரான பிளாஸ்டிக் அரிசியின் அளவு மூன்று மூட்டை அளவாவது இருக்கும். அப்படியென்றால் மூட்டையின் அளவு இயல்பாகவே கூடிவிடும். அப்படியிருக்க எப்படி கலப்படம் செய்வது எளிதாக இருக்கும்.

கேள்வி 4 : கலப்படம் செய்தால் அளவு கூடாதே?

ஆம் கலப்படம் செய்தால் அளவு மிக அதிக அளவு கூட வாய்ப்பில்லை. இப்போதைக்கு பிளாஸ்டிக்கில் அரிசி செய்ய ஆகும் செலவு சாதாரண அரிசியின் விலையை விட மிக அதிகமாக இருக்கும். எனவே பிளாஸ்டிக் அரிசியை லாப நோக்கத்துக்காக கலப்படம் செய்ய வாய்ப்பே இல்லை.

கேள்வி 5 : அப்படி என்றால் எதற்காக பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல் வந்தவண்ணம உள்ளது.

என்னுடைய அனுமானத்தின்படி இது பெரிய தொழில் நிறுவனங்களின் சதியாக இருக்கலாம். ஆம் தற்சமயம் இந்தியாவில் அரிசி விற்பனை என்பது சிறு தொழில். பல அரிசி மண்டிகள் பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலையே செய்து வருகின்றன. மக்களும் அதே கடைகளில் தான் வாங்குவார்கள.

இதனை நன்றாக உணர்ந்துகொண்ட கார்ப்பரேட் கம்பெனிகள் அரிசியில் கலப்படம் என்று கூறி மக்களின் மனதில் சந்தேக பார்வையை திறந்து விட்டுளார்கள். இதனை இந்த பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி மிக சுலபமாக தங்களுடைய அரிசி தான் கலப்படமற்ற அரிசி என சான்றிதழ் பெற்று விளம்பரம் செய்து விற்க ஆரம்பித்து விடுவார்கள். சாதாரண கடை வைத்திருக்கும் அண்ணாச்சியோ தன்னால் கடையை மூடிவிட்டு சென்றுவிடுவார்.

சிறிது காலம் போக அவர்களே அரிசியின் விலையை நிர்ணயம் செய்துகொண்டு விற்பார்கள்.

மக்களே சந்தேகப்படுங்கள் தவறில்லை. சந்தேகமே தெளிவுபெற செய்யும். ஆனால் அந்த சந்தேகத்திற்கு விடை தேட முயற்சிக்காமல்  சந்தேகத்தை மட்டும் பிறரிடம் கொண்டு சென்று கொண்டே இருக்காதீர்கள்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version