Site icon பாமரன் கருத்து

ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால்!!!

ஒருவேளை மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற கற்பனையில் உதித்த கவிதை இது

எந்த கவலையும் இல்லாமல்
இயற்கையோடு இணைந்து
பூமித் தாயின் முகங்களில்
எல்லைக் கோடுகள் வரையாமல்
சாதி சடங்குகள் இல்லாத
கொலை கொள்ளைகள் இல்லாத
நிலவுலகில் நானும்
நிம்மதியாக வாழ்ந்திருப்பேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!

இறந்த பின்பு கோவணம் கூட சொந்தமில்லை
என்பதை உணர்ந்தும்
பிறக்காத பிள்ளைக்கும்
அந்த பிள்ளைக்கு பிறக்க போகும் பேரனுக்கும்
சொத்து சேர்க்கும் மனித வங்கியாக
மாறி இருக்க மாட்டேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!

உழைக்க ஓடியிருப்பேன்
தொப்பையை குறைக்க ஓடியிருக்க மாட்டேன்
எறும்புகளை போல சுறுசுறுப்பாக இருந்திருப்பேன்
சுகர் பிபி அறியாமல் வாழ்ந்திருப்பேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!

மலைகளை வெட்டி வருமானம் ஈட்டலாம்
மணல்களை சுரண்டி புது வீடு கட்டலாம்
ஊழல்களை செய்து பணத்தில் படுக்கலாம்
என்ற வித்தைகள் எதுவும் தெரியாமல் 
ஐந்தறிவுள்ள மிருகமாகவே வாழ்ந்து
ஐந்தறிவுள்ள மிருகமாகவே இறந்து
எனக்கு கிடைத்த இந்த இயற்கையை
அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொடுத்திருப்பேன்
இந்த ஆறாம் அறிவு இல்லாமல் இருந்திருந்தால்!!!






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version