Site icon பாமரன் கருத்து

குரங்கிலிருந்தது மனிதன் பிறக்கவில்லை – அப்படியென்றால் டார்வின் சொன்ன உண்மை என்ன ?  டார்வின் வீக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?

இந்திய விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சி கொள்கையின் தந்தை – டார்வின் பிறந்த (பிப்ரவரி 12) இந்த வாரத்தை  (பிப்ரவரி 12 முதல் 18 வரை ) டார்வின் வீக் என்கிற பெயரில் கொண்டாட இருக்கிறார்கள் . எப்போதும் போலில்லாமல் இப்போது இந்திய விஞ்ஞானிகள் இதனை கொண்டாட இருப்பதற்கு முக்கிய காரணம் இருக்கின்றது .
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக “டார்வின் பரிணாமக்கொள்கை தவறானது , அறிவியலில் நிரூபிக்கப்படாத ஒன்று , அதனை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கிட வேண்டும் ” என முக்கியமான இடத்தில் இருந்து கண்டனக்குரல் ஒலித்தது . அதனை கூறியவர் வேறு யாருமில்லை , மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் .
அகில இந்திய வைதிக நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கல்வித்துறைக்கு முக்கியமான நபர் ஒருவர் , தான் கூறுவது இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியதுவம் பெறும் என்பதை அறிந்தே மேற்கூறியவாறு தெரிவித்து இருக்கிறார் .
நீங்கள் நினைக்கலாம் மத்திய அமைச்சர் படிப்பறிவு குறைவாக இருந்திருக்கும் அதனால் தவறுதலாக கூறியிருப்பார் என்று , உங்களுக்காக அவர் வேதியியல் துறையில் M.Phil மற்றும் பிற துறைகளில் MA, Ph.d போன்ற உயரிய பட்டங்களை பெற்றவர் .
மிகமுக்கிய நபராக இருப்பவரின் இதுபோன்ற பேச்சுக்கள் உலக அரங்கில் இந்திய அறிவியலின் தரத்தை தாழ்த்திவிடும் என்பதாலும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவும் இருக்கின்ற டார்வின் கோட்பாட்டை உண்மையென நிறுவும் கடமையும் விஞ்ஞானிகளுக்கு இருப்பதால் டார்வின் வீக் கொண்டாட பட இருக்கின்றது .
அவருடைய இந்த பிற்போக்குத்தனமான கருத்தினை எதிர்க்கும் பொருட்டும் டார்வினின் பரிணாம கொள்கையின் சரியான புரிதலை மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைக்க கொண்டாடப்படுகிறது டார்வின் வீக் .
அமைச்சர் எதற்காக இப்படி பேசுகிறார் என்று அலசி ஆராய்வதை விட டார்வின் சொன்ன அறிவியல் உண்மையை அறிந்துகொள்ளுவதே நல்லது .

டார்வின் பரிணாம கொள்கை :

டார்வின் என்றாலே நம் நினைவுக்கு வருவது “குரங்கிலிருந்தது மனிதன் தோன்றினான் ” என்பதை கண்டுபிடித்தவர் என்பதே . இதற்கு முக்கிய காரணம் மேம்போக்கான பாடப்புத்தகங்களும் சரியாக புரிதலை ஏற்படுத்தாத ஆசிரியர்களும் தான் .
உண்மையில் டார்வின் சொன்னது இதுதான் “தன்னுடைய The Descent of Man-புத்தகத்தில் டார்வின் வெளியிட்டுள்ள ஒரு hypothesis, அதாவது ஓர் அறிவியல் அனுமானம் என்னவென்றால், மனிதக்குரங்கு இனமும் மனிதனும் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகள் என்பதே. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று, மனிதக் குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்று டார்வின் எங்கும் கூறவில்லை. மனிதனும், மனிதக் குரங்கும், இயற்கை தேர்ந்தெடுத்த Tree of Life-ல் அடுத்தடுத்த கிளைகள் என்பதே. இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால், மனிதனும் மனிதக்குரங்கு இனமும் (குரங்கிற்கும்-மனிதக் குரங்கிற்கும் உடலியல் ரீதியாகவே பல வேறுபாடுகள் உள்ளன. ஆக, டார்வின் குறிப்பிட்டது குரங்கை  அல்ல – மனிதக் குரங்கை!) சகோதர இனங்கள். டார்வின் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எதனை அனுமானம் செய்தாரோ அதைத்தான் மறுக்க முடியாத அறிவியல் துறையின் மரபியல் ஆய்வுகளும் நமக்கு நிரூபணம் செய்கின்றன. உதாரணமாக, மனிதனுக்கும், மனிதக் குரங்கு இனத்திற்கும் 96 சதவீத ஜீன்கள் ஒரே மாதிரி உள்ளன என்பதுதான் அது!” (Thanks : vikadan)
அவர் என்றுமே மனிதன் குரங்கிலிருந்தது பிறந்தான் என சொல்லவில்லை . நமக்கு அப்படி திரித்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களே, ஆசிரியர்களே டார்வின் வீக் கொண்டாடுங்கள்  , டார்வின் பரிணாமக்கொள்கையினை சரியாக புரிந்துகொள்ளுங்கள் . அதுவே உங்களுக்கு அறிவியல் குறித்த புரிதல்களையும் , கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திட பெரும் உதவியாக இருக்கும் .

படியுங்கள் , பகிர்ந்திடுங்கள்

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version