Site icon பாமரன் கருத்து

1998 வாஜ்பாய் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதெப்படி?

முன்னால் பிரதமர் பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாய் 16/08/2018 அன்று மறைந்தார்

 

வாஜ்பாய் என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது பொக்ரான் அணுகுண்டு வெற்றி தான் . அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள்  கண்காணிப்பது தெரிந்தும் அஞ்சாமல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திட உத்தரவிட்டவர் திரு வாஜ்பாய் அவர்கள் .

 

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1978 ஆம் ஆண்டு மே 18 அன்று பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது  . சிரிக்கும் புத்தர் என்கிற பெயரில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை கண்டு உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன  . காரணம் அணுமின் திட்டத்திற்குத்தான் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் தொழில்நுட்ப அளவில் உதவியளித்தன .

 

இதன்பின்னர் உலக நாடுகளும் அவர்களின் செயற்கைகோள்களும் நம்மை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டன .பல தடைகளும் போடப்பட்டன .

 

முயன்ற நரசிம்மராவ்

 

காலம் கடந்தது , அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் அச்சுறுத்திட, இந்திய பாதுகாப்பு அளவுக்கு அதிகமாக  மோசமடைவதால் நாம் நிச்சயமாக அணுகுண்டு சோதனை ஒன்றினை நடத்தியே தீரவேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களும் , அணு விஞ்ஞானிகளும் வற்புறுத்திட ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் .

 

அவரது அனுமதியின்பேரில் அணுகுண்டு சோதனைக்கான ஏற்பாடுகள் பொக்ரானில் தொடங்கின . ஆனால் மேலே பறந்துகொண்டிருந்த செயற்கைகோளின் கேமராவில் நமது செயற்பாடுகள் பதிவாக, அப்போதய அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கு அந்த பதிவுகளை அனுப்பியது அமெரிக்க உளவுத்துறை .

 

கிளிண்டனின் எதிர்ப்பினால் அந்த அணுகுண்டு சோதனை முயற்சியை கைவிட்டார் நரசிம்மராவ் .

 

அசத்திய அப்துல்கலாம் வாஜ்பாய் கூட்டணி

 

ஏற்கனவே அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டாலும் இந்தியாவின் திறனை உலகறிய வேண்டும் என்றால் அதற்கு எப்படியாவது அணுகுண்டு சோதனை நடத்தியே ஆகவேண்டும் என்பதனை உணர்ந்திருந்தார் பிரதமர் வாஜ்பாய் . மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ஆக அப்துல்கலாம் இருந்தார் .

 

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் கண்ணசைக்க அப்துல்கலாம் தலைமயிலான குழு மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனைக்கு தயாரானது .

 

பொக்ரான் அணுகுண்டு சோதனையை பார்வையிடும் கலாம் மற்றும் வாஜ்பாய்

 

பொக்ரான் அணுகுண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் ஆரம்பித்த அப்துல்கலாம் அவர்களின் வளர்ச்சி குடியரசுதலைவர் பதவிவரை அவரை உயர்த்தியது

 

அமெரிக்காவை ஏமாற்றியது எப்படி ?

 

ஏற்கனவே ஒருமுறை அமெரிக்க செயற்கைகோள்களின் மூலமாக மாட்டிக்கொண்டோம் என்பதனால் இவர்களின் முதல் சவால் செயற்கைகோளின் பார்வையில் படாமல் சோதனையை நடத்துவது தான் .

 

அடுத்தது , உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்தும் ஒட்டுக்கேட்கும் நாடுகளிடம் இருந்தும் அணுகுண்டு நடத்தப்படுவது தொடர்பான தகவல்கள் தெரியாமல் பாதுகாப்பது .

 

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்

 

ஏற்கனவே செயற்கைகோள்கள் இயங்கும் விதம் குறித்த அறிவினை பெற்றவராக கலாம் இருந்தபடியால் , செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு மேலே பறக்காத கால நேரத்தை கணக்கிட்டு கூறினார் . பெரும்பாலும் இரவு நேரமாகவே அமைந்த அந்த நேரங்களில் கடுமையாக உழைத்து அணுகுண்டு சோதனைக்கு தேவையான வேலைகளை செய்தனர் . மீண்டும் செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு வரும் நேரத்திற்கு முன்பாக வேலைகளை முடித்துவிட வேண்டும்  . அப்படியொரு வேலை நடந்ததற்கான அடையாளம் கூட தெரியக்கூடாது .

 

அடுத்தது உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க கலாம் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்ற அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டன . பேசிக்கொள்ளும்போது புனைப்பெயர்களை கொண்டே அழைத்துக்கொண்டனர் . கலாம் அவர்களின் பெயர் கலோனல் பிருதிவிராஜ் .

 

ராணுவ பயிற்சி நடைபெறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திட ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர் . பல ஏவுகணைகள் செலுத்தப்பட்டு புகை மண்டலமாக தோன்றும்படி செய்யப்பட்டன . இதனை செயற்கைக்கோள் மூலமாக கண்காணித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோ போர் ஒத்திகை நடைபெறுகிறதென்று நம்பிவிட்டார்கள்.

 

நடந்தது பொக்ரான் அணுகுண்டு சோதனை

 

மே 10 அன்று அப்துல்கலாம் அவர்கள் வாஜ்பாய் அவர்களுக்கு “நாங்கள் தயார் ” என செய்தியனுப்ப மே 11 அன்று பிற்பகலில் வரலாற்று சிறப்புமிக்க பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது .

 

உலகநாடுகளின் நில அதிர்வு கருவிகள் நம் அணுகுண்டு சோதனையின் மூலமாக ஏற்பட்ட நில அதிர்வுகளை பதிவு செய்ய அதிர்ந்தன உலக நாடுகள் , குறிப்பாக அமெரிக்கா . அமெரிக்க உளவுத்துறையும் செயற்கைகோள் கண்காணிப்பும் இதில் தோற்றுப்போனதானதாக கருதியது .

 

பொக்ரான் அணுகுண்டு சோதனை

 

அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாஜ்பாய் ” இதை மற்றவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நாமும் இனி அணு ஆயுத நாடுதான் ” என முழங்கினார்  .

 

பல ஆண்டுகளாக இந்தியாவை தடுத்து வைத்திருந்த பல நாடுகளின் தடைகள் இந்த பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் சிதறிப்போயின .

 

பாமரன் கருத்து

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version