Site icon பாமரன் கருத்து

யாருக்கு வாக்களிப்பது??

யாருக்கு வாக்களிப்பது??


கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் ஒரு பாடல் அமைத்து இருந்தேன்.[https://www.youtube.com/watch?v=M1DTvgzMnrY]. அதை படித்து விட்டு சில நண்பர்கள் கட்டாயம் இந்த முறை வாக்களிக்கிறோம் என்றார்கள். ஆனால் பெரும்பாலான நண்பர்கள் கேட்ட கேள்வி “தேர்தலில் நிற்கும் எவரும் நல்லவர்களாக எங்களுக்கு தெரியவில்லை, அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்ற நம்ம்பிக்கை வரவில்லை. கட்டாயம் நீ வாக்களிக்க சொல்கிறாய். யாருக்கு வாக்களிக்கலாம் என்று நீயே சொல் என்றார்கள்”

எனக்கு தூக்கி வாரி போட்டது ஏனென்றால் இந்த கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை.. நானும் சிந்தித்து பார்த்தேன்..ஒவ்வொரு கட்சியாக சொல்லலாம் என்று…

2ஜி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் ஒரு கட்சி 
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒரு கட்சி 
வார்த்தைகளில் அடக்கம் இல்லாத 
மக்கள் நம்பிக்கை இழந்த கட்சி 
சாதி பெயரை சொல்லி நடக்கும் கட்சி 
கொள்கைகளே இல்லாத ஒரு கட்சி 
இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒரு குறையுடன் தான் இருகின்றன…

சரி இந்த கட்சிகள் பிடிக்கவில்லை என்றால் NOTA வில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள் என்று சொல்லலாம் என்றால் நமது நாட்டில் NOTA ஒரு சம்பிரதாயத்திற்கு மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. [NOTA என்பது  யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றபட்சத்தில் நமது வாக்கினை NOTA வில் போடலாம்.. ஆனால் நீங்கள் போடும் இந்த ஓட்டு உங்கள் ஓட்டினை வேறு யாரும் போட விடாமல் தடுப்பதற்காக மட்டுமே. ஒருவேளை NOTA பெற்ற வாக்குகள் தேர்தலில் நிற்பவரர் பெற்ற வாக்கினை விட அதிகமாக இருந்தாலும் NOTA விற்கு அடுத்ததாக அதிக வாக்குகள்  பெற்றவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கபடுவர்.] 

NOTA வின் இந்த பலவீனத்தை கருத்தில் கொண்டே பெரும்பாலனவர்கள் வாக்களிக்க வருவதில்லை. NOTA அதிக வாக்குகள் பெரும் பட்சத்தில் அந்த தொகுதியில் போட்டியிட்ட எவருக்கும் தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்றும், அடுத்து நடத்தப்படும் மறு தேர்தலில் புது வேட்பாளர்கள் மட்டுமே நிற்க முடியும் என்பது போன்ற கடுமையான நிலைபாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தால் மட்டுமே நடுநிலையாளர்களும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்வார்கள்.

கோடி கோடியாய் செலவு செய்து தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரத்திற்காக செலவு செய்யும் தேர்தல் ஆணையம் நிச்சயம் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதே எனது கருத்து….

ஸ்ரீ 

Share with your friends !
Exit mobile version