Site icon பாமரன் கருத்து

காஷ்மீர் பிரச்னை என்ன? நேற்று ராஜ்யசபாவில் நடந்த காஷ்மீர் குறித்த விவாதம் என்ன…ஒரு பார்வை…

காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம்  :

காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற வன்முறையை அடக்க பெல்லட் துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் உபயகோப்படுத்தினர். இதில் பல பொதுமக்கள் கண்களை இழந்தும் பாதிக்கப்பட்டும் இருந்தனர். கடந்த 33 நாட்களாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொங்கிய குலாம் நபி ஆசாத் மற்றும் சீதாராம் யெச்சூரி : 

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது “காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 31 நாள் ஆகிறது. என் நினைவுக்கு எட்டிய வரையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரில் தொடர்ச்சியாக 31 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததில்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை.

இந்தியாவின் மகுடம் என அழைக்கப்படும் காஷ்மீர் பற்றி எறிகிறது. ஆனால் அந்த நெருப்பின் தாக்கம் டெல்லியை அடையவில்லை. வெப்பத்தை உணராத நிலையில் டெல்லி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் மவுனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நிலவுகிறது.

காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் என்னதான் சொல்வார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் மக்கள். இது ஒரு அசாதரண சூழல். இந்த நிலையில் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி பிரதிநிகள் காஷ்மீருக்கு சென்று கள நிலவரம் அறிய வேண்டும்” என்றார்.

சீதாராம் யெச்சூரி பேசும்போது “30 நாட்களுக்கு மேலாக காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு அரசால் எப்படி மவுனம் காக்க முடியும். நாம் ஏன் பெல்லட் துப்பாக்கிகளை உபயோகிக்க வேண்டும்.

இது மனிதத்தன்மையற்றது. இது கிரிமினல் குற்றத்துக்குச் சமமானது. இஸ்ரேல்கூட பாலஸ்தீன் நாட்டவர்க்கு எதிராக பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திவிட்டது. எத்தனை முறைதான் இப்பிரச்சினையில் அரசை சாடுவது? ஆனாலும் அரசு திட்டமிட்டே காஷ்மீர் பிரச்சினையில் மவுனம் காக்கிறது” என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் நீரஜ் சேகர் பேசும்போது, “காஷ்மீரில் கொல்லப்படும் இளைஞர்கள் இந்தியர்கள் இல்லையா? பிரதமரோ உள்துறை அமைச்சரோ இதுவரை ஏதும் சொல்லவில்லை. இந்த மவுனத்தின் மூலம் இந்த அரசாங்கம் நாட்டுக்கு எத்தகைய செய்தியை சொல்ல முற்படுகிறது” என்றார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், “அரசின் மவுனம் வேதனையளிக்கிறது” என்றார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங் அவர்கள் இந்த விவகாரம் குறித்து பேசப்படும் என்று சொல்ல நேற்று விவாதம் நடைபெற்றது.

நேற்று நடந்த விவாதம் : 

நேற்று மாநிலங்களைவில் நடைபெற்ற விவாதத்தில் குலாம்நபி ஆசாத் மற்றும் பல தலைவர்கள் மேற்குறிப்பிட்ட அதே கருத்தை வலியுறுத்தி பேசினர். மேலும் பிரதமர் அவர்கள் நிச்சயமாக இந்த பிரச்சனையில் மவுனம் கலைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

உத்திரபிரதேசத்தில் மவுனம் கலைத்த மோடி : 

மாநிலங்களைவில் காஷ்மீர் விவகாரம் நடைபெற்று வரும் நிலையில் உத்திரபிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் உணரப்படும் அதே சுதந்திரம் காஷ்மீருக்கு உண்டு. மெஹபூபா முக்தி அரசும், மத்திய அரசும் இணைந்து மாநிலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுகின்றன. ஆனால், இதனைச் சகித்துக்கொள்ள முடியாத சிலர் அழிவுப்பாதைக்கு தூண்டுகின்றனர்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இன்சனியாத் (மனிதாபிமானம்), ஜம்ஹுரியாத் (ஜனநாயகம்), காஷ்மீரியாத் (காஷ்மீரம்) ஆகிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். நாங்களும் அதே பாதையில் பயணிக்கிறோம். சந்திரசேகர ஆஸாத் பிறந்த இந்த சிறந்த மண்ணில் இருந்துகொண்டு சொல்கிறேன், காஷ்மீரத்து சகோதர சகோதரிகளே, நமது விடுதலைப் போராட்ட வீரர்களால் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அளிக்கப்பட்ட அதே வலிமை காஷ்மீருக்கும் உண்டு. ஒவ்வொரு இந்தியரும் உணரும் அதே சுதந்திர உணர்வு காஷ்மீருக்கு உண்டு.

லேப்டாப், புத்தகம், கிரிக்கெட் மட்டைகள் ஏந்த வேண்டிய அப்பாவி இளைஞர்களின் கையில் கற்கள் கொடுக்கப்பட்டிருப்பது வலியைத் தருகிறது. பூலோக சொர்க்கமான காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கம் பேண இளைஞர்கள் முன்வர வேண்டும்.

சிலரின் அரசியல் சதி வெற்றி யடைந்திருக்கிறது. ஆனால், எளிதில் ஏமாறக் கூடிய, எளிமை யான இளைஞர்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது. மனிதாபிமான மும் காஷ்மீர கலாச்சாரமும் அடி படுவதை அனுமதிக்க முடியாது. ஜனநாயக பாதையும், பேச்சு வார்த்தைப் பாதையும் இருக் கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

காமெடியான அதிமுக எம்.பி.யின் பாடலும் பேச்சும் : 

முக்கிய கட்சியான அதிமுக கட்சியின் நிலைப்பாடை தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும்  எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசும்போது, “காஷ்மீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய தேசம் ஒன்றே. தமிழ் சினிமாக்கள் காஷ்மீர் கொண்டாடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆர் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் இது.

தமிழ் சினிமாக்களில் காஷ்மீரில் படம்பிடிக்கப்பட்ட படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களே. நான் காஷ்மீருக்கு சொந்தமானவன். காஷ்மீர் எனக்குச் சொந்தமானது.இதனை நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காஷ்மீரில் விளையும் குங்கமப்பூ மிகவும் பிரபலமானது. அந்த குங்குமப்பூவை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணியும் உட்கொள்வது வழக்கம். என் தாய் சாப்பிட்டார். என் மருமகள் சாப்பிட்டார். ஏன் என் பேத்தியும் எதிர்காலத்தில் குங்குமப்பூ உட்கொள்வார். எதற்காகத் தெரியுமா? காஷ்மீரத்து குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும் என்ற நம்பிக்கை. அதனால் நானும் காஷ்மீரியே. அப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமிதம்.

அத்தகைய காஷ்மீர் எப்போதும் அமைதியானதாக அழகானதாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின், தமிழக முதல்வரின் விருப்பம். காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் வேண்டுகோள்” என்றார்.

நாளை அனைத்து கட்சிகள் கூட்டம் :

இந்த பிரச்சனை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்கள் எப்போது நாம் அனுபவிக்கும் இந்திய சுதந்திரத்தை அனுபவிக்க போகின்றார்கள்….

நன்றி
ஸ்ரீ 

Share with your friends !
Exit mobile version