Site icon பாமரன் கருத்து

உயிர் இழப்பு போராட்டம் வெற்றியை பெற்று தருமா ? அரசியல் தலைவர்களுக்கு ஒரு கேள்வி ?

2009 இல் ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து தனது இன்னுயிரை துறந்தார் முத்துக்குமார். அதற்கு பிறகு சசி பெருமாள் மது ஒழிப்பிற்காக போராடும் போது உயிரை தியாகம் செய்தார். நேற்று விக்னேஷ் என்னும் இளைஞன் காவேரி பிரச்னை, புதியகல்விக்கொள்கை , சம்ஸ்கிருத திணிப்பு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு நெருப்பிற்கு தன் உயிரை கொடுத்து பலியானார்.

நடப்பது என்ன ?

அன்று முத்துக்குமார் உயிரை இழந்தாலும் ஈழத்தில் நடந்த போரை  எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர் இறப்பிற்கு கண்ணீர் சிந்தி பேசிய எந்த கட்சி தலைவனும் உறுதியாக ஈழ போரை நிறுத்த போராடவில்லை என்பதே உண்மை. அவர்கள் அனைவரும் சேர்ந்தே தான் அத்தனை ஈழ உயிர்களையும் எடுக்க உதவினார்கள்.

சசி பெருமாள் என்ற காந்தியவாதி மதுவிலக்கிற்கு எதிராக உயிரை விட்டார். அவர் உயிர் விட்டவுடன் அரசாங்கம் மதுவிலக்கை அறிவித்துவிட்டதா என்ன ? இல்லை இன்னும் அறிவிக்கவில்லை. மதுவிலக்கை இந்த சமூகம் வரவேற்கவும் தயாராக இல்லை. அப்படி இருந்திருந்தால் அனைவரும் போராடியிருப்பார்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்து இருப்பார்கள். உங்கள் தியாகம் இன்னும் மதிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இன்று விக்னேஷ் என்னும் இளைஞன் காவேரி பிரச்சனைக்காக உயிரை விட்டுள்ளதாக தெரியவருகின்றது. எத்தனை உயிர்கள் போனாலும் உச்சநீதிமன்றம் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. அதற்க்கு சட்டம் என்னவோ அது தான் முக்கியம் அதை செயல்படுத்தத்தான் அது முயலும்.

ஈழ போராட்டம் குறித்து உணர்ச்சியோடு பேச வைகோவையும் சீமானையும் போல முடியுமா? அவர்கள் இந்த பிரச்சனைகளுக்காக உயிரையா விட்டுவிட்டார்கள்? இல்லையே அவர்கள் பேசினார்கள் பேசுகிறார்கள் பேசுவார்கள். அவர்கள் தெளிவானவர்கள் .

உயிரை விடும் முன்பாக தமிழனே ஒன்றை மட்டும் நினைவில் கொள் , உன் உயிர் போனால் நீ நினைத்தது நடக்கும் என்றால் உன் உயிரை விடுவதில் ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால் உன் தலைவனின் உணர்ச்சி மிகுந்த பேச்சில் மயங்கி மட்டும் உன் உயிரை விட்டுவிடாதே.. நீ மதிக்கும் எந்த தலைவனும் எந்த பிரச்சனைக்கும் உயிரை விட துணிந்தது இல்லை.

அரசியல் தலைவர்களுக்கு ஒரு கேள்வி ?

உணர்ச்சி மிகுந்த பேச்சுக்களில் தமிழ் பற்றை பற்றி பேசும் தலைவர்களே ஒரு தமிழனின் உயிரை எடுக்கும் அளவிற்கு உங்கள் பேச்சு இருக்கலாமா? இதை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?

வைகோவையும் சீமானையும் நேரடியாகவே கேட்கின்றேன். நீங்கள் ஈழப்போராட்டம் குறித்தும் காவேரி பிரச்னை குறித்தும் எவ்வளவு உணர்ச்சியுடன் பேசுகிறீர்கள். ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். பேசிக்கொண்டுதான் தான் இருந்தீர்கள். உங்கள் உயிரை விட்டாவது அதை தடுத்திருக்கலாமே? உங்களுக்கு தெரியும் உங்கள் உயிரை விட்டாலும் அதை தடுக்க முடியாது என்று. அதை அன்றைய திமுக செய்திருந்தால் மட்டுமே தடுத்திருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் உங்கள் பேச்சால் முத்துக்குமார் உயிரை விட்டதுதான் மிச்சம். இன்னும் உங்களால் அந்த உயிர் இழப்பிற்கு என்ன நியாயம் செய்ய முடிந்தது. இன்னும் ஐநா விசாரிக்கிறது..இலங்கை அரசாங்கம் விசாரிக்கிறது. நாம்  வேடிக்கை பார்க்கின்றோம்.

அதே போலத்தான் இன்று இழந்த விக்னேஷ் உயிருக்கு என்ன நியாயம் செய்ய போகின்றிர்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாது. உச்சநீதி மன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கில் உங்கள் போராட்டம் எதையும் செய்துவிடாது என்பது உங்களுக்கு தெரியும் ஆனால் அதை உங்கள் தொண்டர்களுக்கு தெளிவு படுத்தாது ஏன்?

தமிழனே உன் உயிர்க்கு மதிப்புண்டு !!! யாரையும் நம்பி உன் உயிரை விடாதே ! நீ போராட நினைத்தால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து !! அதுவே மிகப்பெரிய போராட்டம்.

Share with your friends !
Exit mobile version